கற்பு பற்றி குஷ்பு பேசுனதும் பொங்குனாங்க.. எய்ட்ஸ்ல ஏன் இரண்டாமிடம்?.. வேட்டையன் இயக்குநர் கேள்வி!
சென்னை: ஜெய்பீம், வேட்டையன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் த.செ. ஞானவேல் இன்று நடைபெற்ற ஜென்டில்வுமன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் இந்த படம் ஸ்டீரியோடைப்புகளை உடைத்து பல விஷயங்களை பேசுவதாக கூறினார். அவர் பேசும் போது, 'கற்பு' குறித்து குஷ்பு பேசியதும் தமிழ்நாட்டில் பலரும் அவருக்கு எதிராக பொங்கினர். அப்போது நான் எழுதிய கட்டுரை பெரும் வரவேற்பு பெற்றது என்றார்.
தமிழ்நாட்டில் கலாச்சாரம் எனும் பெயரில் பெண்களை மதிப்பதாக இவர்கள் சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் மட்டும் தான். ஆனால், உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தான் அதிகளவில் நடந்துக் கொண்டிருக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜென்டில்வுமன் டீசரிலேயே பெத்தவனா இருந்தாலும் கட்டுனவனா இருந்தாலும் பெண்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறானுங்க என்கிற வசனம் இடம்பெற்றிருக்கும். அதற்கு தகுந்தாற் போல தனது கருத்துக்களை வேட்டையன் பட இயக்குநர் ஞானவேல் முன் வைத்துள்ளார்.
ஜென்டில்வுமன்: வரும் மார்ச் 7ம் தேதி ஜென்டில்வுமன் படம் திரைக்கு வருகிறது. காதல் என்பது பொதுவுடமை எனும் படம் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது. ஓரினச்சேர்க்கையை மையப்படுத்திய படமாக அந்த படம் உருவாகி இருந்தது. வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில், அடுத்ததாக ஜென்டில்வுமன் படத்தில் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக நடித்த அவருக்காக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் த.செ. ஞானவேல் பங்கேற்று பேசினார். இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குஷ்புவுக்கு குவிந்த கண்டனம்: கற்பு குறித்து தப்பாக குஷ்பு பேசிவிட்டார் என அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன. அப்போது தரவுகளின் அடிப்படையில் நான் எழுதிய கட்டுரை ஒன்று பெரும் தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றது என மேடையில் த.செ. ஞானவேல் பேசியதும் பலரும் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கைகளை தட்டினர்.
எய்ட்ஸில் இரண்டாம் இடம்: கற்பு, கலாச்சாரம் என பேசிக் கொண்டிருக்கும் போது, எப்படி சார் எய்ட்ஸில் 2வது இடம் வர முடியும் என்றுதான் அந்த கட்டுரையை எழுதியிருந்தேன். இங்கே பெண்களுக்கான பாதுகாப்பு தருகிறோம் என்றும் பெண்களை கடவுள் போல மதிக்கிறோம் என சொல்வதெல்லாம் சுத்தப்பொய் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டு வருவது தான் உண்மை என பேசியுள்ளார்.
ரிசப்ஷனில் பெண்கள் ஏன்?: இதுவரை பல திருமணங்களுக்கு சென்றுள்ளேன். ரிசப்ஷனில் பெண்கள் மட்டுமே பன்னீர் தெளிப்பது, சந்தனம் கொடுப்பது, பூ கொடுப்பது என உள்ளனர். அங்கே ஆண்கள் இருந்தால் என்ன உலகமே அழிந்து போய்விடுமா என யோசிப்பேன். இப்படி ஏகப்பட்ட ஸ்ட்ரீயோடைப்புகளில் தான் நாம் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கேள்வி கேட்கும் படமாகவும் உடைத்தெரியும் படமாகவும் இந்த ஜென்டில்வுமன் உருவாகி இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும். படம் எடுத்து முடித்து விட்டால் பொதுவாக இப்போதெல்லாம் பலருக்கும் பயம் தான் வரும். ஆனால், இந்த டீம் ரொம்பவே நம்பிக்கையுடன் உள்ளனர். அந்தளவுக்கு இவர்கள் நல்ல படம் எடுத்து வைத்திருக்கிறோம் என்று நம்புகின்றனர். இந்த படக்குழுவுக்கு வெற்றி கிடைக்கட்டும் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











