இரண்டு பேர் துணை.. தள்ளாடி வந்து வி.சேகருக்கு கவுண்டமணி அஞ்சலி.. வயசு ஆகிடுச்சு.. ரொம்ப உடைஞ்சிருக்காரு
சென்னை: இயக்குநர் வி.சேகர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். சென்னையில் இருக்கும் அவரது கோடம்பாக்க இல்லத்தில் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக உடல் வைக்கப்பட்டிருக்கிறது. பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் கவுண்டமணி இந்த வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கோலிவுட்டில் குடும்ப பாங்கான படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குநர் வி.சேகர். அவர் இயக்கிய அத்தனை படங்களும் கூட்டு குடும்பத்தின் வலிமை, அதற்குள் இருக்கும் பிரச்னைகள் என அத்தனையையும் பேசியது. அதேபோல் மிடில் கிளாஸ் குடும்பம், லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்வியலை அச்சு அசலாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி ப்ளஸ்: அவர் குடும்ப படங்கள் எடுத்தாலும் அதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அவருடைய படங்களில் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று காமெடியன்களாவது நடித்துவிடுவார்கள். இதன் காரணமாக அவரது ஷூட்டிங் ஸ்பாட்டே படு கலகலப்பாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து சொல்வதுண்டு. வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையாக அவரது படங்களில் நடித்தார்கள்.

வளர்ச்சியும் அவரால்தான்: அப்படி அவர்கள் நடித்த படங்களில் இரண்டு பேரின் காமெடியும் வேறு மாதிரி இருந்தன. அதன் காரணமாக வரிசையாக வாய்ப்புகளும் வந்தன. சொல்லப்போனால் அவர்கள் வளர்ந்துவந்த நேரத்தில் சரியாக அவர்களை பயன்படுத்தி பலன் கண்டார். காமெடி மட்டுமின்றி ஏகப்பட்ட முற்போக்கு கருத்துக்களையும் தனது படங்களில் போகிற போக்கில் அசால்ட்டாக பேசியவரும் வி.சேகர்.
உடல்நல குறைவு: சூழல் இப்படி இருக்க தற்போது சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருக்கும் அவருக்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைத்து தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்றுதான் குடும்பத்தினரும் திரைத்துறையினரும் நம்பினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
நேரில் அஞ்சலி: அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். அதேபோல் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவருகின்றனர். அந்தவகையில் வி.சேகருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய நடிகர் கவுண்டமணியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கருப்பு சட்டை அணிந்தபடி வயோதிகம் காரணமாக இரண்டு பேரின் துணையோடு தள்ளாடியபடி வந்தார். இந்த வயதிலும் மறக்காமல் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார் கவுண்டமணி. ஆனால் இன்னமும் வடிவேலு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் விரைவில் அவரும் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறையினர் இன்று அஞ்சலி செலுத்திய பிறகு மாலை வி.சேகர் பிறந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வேட்டவலம் கிராமத்தில் அவரது இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











