அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் கேளடி கண்மணி படத்தில் நடித்த போது அவருடனான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்த்.
பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணித்தார்.
அவரது மறைவு ஒவ்வொரு ரசிகரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் இசை உள்ளவரை அவரது புகழ் வாழும் என பிரபலங்களும் ரசிகர்களும் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர் வசந்த்
இசைத்துறையை சேர்ந்தவர்களும் திரைத்துறையை சேர்ந்தவர்களும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கேளடி கண்மணி படத்தின் இயக்குநர் வசந்த் அவருடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மண்ணில் இந்த காதல்
கேளடி கண்மணி திரைப்படம் 1990ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் எஸ்பிபிக்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற மண்ணில் இந்த காதல் இன்றி பாடல் பெரும் ஹிட்டானது.

பிஸியான காலக்கட்டம்
இன்றும் அந்தப் பாடலை ரசிக்காத இதயங்கள் இல்லை. அதற்கு முன்னதாக பல படங்களில் எஸ்பிபி நடித்திருந்தாலும் கேளடி கண்மணி திரைப்படத்தல் முழுக்க முழுக்க லீடிங் ரோலில் நடித்தார். இசைத்துறையில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார் எஸ்பிபி.

தாங்க முடியாத இழப்பு
அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் வசந்த், பாவத்தையும் உணர்ச்சியையும் காட்ட அவரைப் போன்ற யாரும் இல்லை. அவரைப் போல ஹம்பிளானவர்களும் யாரும் இல்லை. அவருடைய பரபரப்பான காலங்களில் ஒன்றான அந்த நேரத்தில் எனது முதல் படத்தில், அவர் படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக் கொண்டு தனது சிறந்த நடிப்பை வழங்கினார். அவரது இழப்பு உண்மையில் தாங்க முடியாதது.

யாரை வைத்து முடிப்பீர்கள்?
அந்தப் படத்தின் போது இந்தப் படத்தில் ஒரு பாடலை மூச்சு விடாமல் பாட முடியுமா என்று கேட்டேன். எத்தனை நிமிடம் என்றார். 5 நிமிடம் என்றேன். அதற்கு பாடலாம் ஆனால் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள் என்று கேட்டார் எஸ்பிபி. மேலும் 10 நொடிகள் கூட யாராலும் மூச்சு விடாமல் இருக்க முடியாது என்றார்.

சரணம் பாடினார்
இருந்த போதும் சரணத்தை மூச்சு விடாமல் பாடினார் எஸ்பிபி. 40 வினாடிகள் சரணத்தை மூச்சு விடாமல் பாடினார் எஸ்பிபி என அவரது நினைவலைகளை உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார் இயக்குநர் வசந்த். இந்தப் படத்தில் மண்ணில் இந்த காதல் இன்றி பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களும் வெறும் 30 நிமிடத்தில் ரெக்கார்டு செய்யப்பட்டதாகவும் வசந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











