பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.. வசந்த பாலன் பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவில் முற்போக்கு அரசியல் பேசிய படங்களை விட, பிற்போக்குத்தனமான அரசியல் பேசிய, அல்லது எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாத காட்சிகளைக் கொண்ட பல படங்கள் வெளியாகி உள்ளது. அப்படி வெளியான படங்கள் வெள்ளி விழாவும் கண்டுள்ளது. அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள், தமிழ் சினிமா உலகம் எவ்வளவு தரமற்றதாக இருந்துள்ளது. இந்நிலையில் வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை எடுத்த இயக்குநர் வசந்த பாலன், பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்தற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கினை மாற்றிய இயக்குநர் என்று தாராளமாக கூறலாம். இவர் தொடங்கியுள்ள நீலம், கூகை போன்றவை தமிழ் சினிமா தளத்தில் மட்டும் இல்லாமல், பண்பாட்டுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நீலம் அமைப்பு ஒருங்கிணைத்த, பி.கே. ரோஷி திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்த பாலன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வசந்த பாலன் பேசும்போது, " தமிழ் சினிமாவில் ரஞ்சித் வருவதற்கு முன்னர் தலித் பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது. இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே வந்த பிறகு, ரஞ்சித் தமிழ் சினிமாவிற்குள் வந்த பிறகு, மாரி செல்வராஜ் வந்த பிறகு மொத்த பார்வையும் மாறியுள்ளது. வெயில் படத்தில் நான் ஒரு பன்றி மேற்பவரை வில்லனாக காட்சிப்படுத்தி இருப்பேன். அதற்காக இந்த மேடையில் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பா. ரஞ்சித்: சிறுபான்மையினர் மற்றும் தலித் கதாபாத்திரங்களை வடிவமைக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், இருபாலர்கள் மூன்றாம் பாலினத்தவரை எப்படி நடத்த வேண்டும் என்பதை மிகக் கூர்மையாக ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்களின் மூலம் எடுத்து வந்தது, மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த மாற்றம் மிகவும் முக்கியமான மாற்றம், மொத்த தமிழ் சினிமாவையுமே அது மாற்றி விட்டது. கலையின் மிகவும் முக்கியமான வேலை, அரசியல்தான் என நினைக்கிறேன். அந்த வேலையை ரஞ்சித் மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

கூகை: ஒரு இயக்குநருக்கு பெரிய நடிகரான ரஜினி படம் கிடைத்து, பணம் வந்த பிறகு, அவர் அந்த பணத்தைக் கொண்டு கல்யாண மண்டபம் கட்டலாம், ஸ்டுடியோ கட்டலாம் அல்லது கொடைக்கானலில் இடம் வாங்கிப் போடலாம். ஆனால் ரஞ்சித் கூகை என்ற நூலகத்தை திறந்தது எவ்வளவு பெரிய விஷயம்? உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது, என்ன புத்தகம் படிக்க வேண்டும், என்ன புத்தகம் படிக்க கூடாது எனத் தெரியாது.

பத்திரமாக:ஆனால் அவர் உருவாக்கிய கூகை மிகப்பெரிய இயக்கமாக மாறி நிற்கிறது. எனது அலுவலத்திற்குச் செல்லும் வழியில் கூகையைக் கடந்துதான் செல்கிறேன் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஒன்றே ஒன்றுதான் கூறுவேன், ரஞ்சித்தை மிகவும் பத்திரமாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அரசியலை படங்களில் கட்டாயம் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது" என பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், “ரஞ்சித் இன்றைக்கு இசைக்கு ஒரு விழா நடத்துகிறார், திரைப்படங்களுக்கு ஒரு விழா நடத்துகிறார். எனக்கு இவை எல்லாம் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த மேடையில் மிகவும் அன்போடும் மகிழ்ச்சியோடும் நிற்கிறேன். மிகவும் கவனமாக அரசியலை நமது படங்களில் கூறவேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது.
எதிர்க்குரல்: லபதா லேடீஸ் படம் ஆஸ்காருக்கு செல்லும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க கூட முடியாமல் உள்ளோம். இப்போது விஸ்வா கூறினார், கொட்டிக்காளி படம் வெளியான போது அதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்க கூடாது என ஒரு இயக்குநர் கூறும்போது எனக்கு கோபம் வந்தது. அதேபோல் நமது எதிர் குரலை மிகவும் கவனமாக பதிவு செய்ய வேண்டும். இப்போது தமிழ் சினிமா மிகவும் மோசமான கால கட்டத்தில் உள்ளது. நான் ஒரு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். எனது கடைசி படத்தை எனது நண்பருடன் சேர்ந்து தயாரித்திருந்தேன். இப்போது மேடையில் உள்ள தயாரிப்பாளர்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
நெஞ்சு வலிக்க: படத்தின் கதைச்சுருக்கம் கொடுத்தால் ஓ.கே சொல்லிவிடுவார்கள், முழுக்கதையையும் எழுதிக் கொடுத்தால் அதை பார்த்துவிட்டு ஓ.கே. சொல்லி விடுவார்கள் என்று அப்போது இல்லை. நானெல்லாம் நெஞ்சு வெடிக்க கதை சொல்லியுள்ளேன். தயாரிப்பாளர்கள் நன்றாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு மதியம் 2.30 மணிக்கு கதை சொல்ல வர சொல்லுவார்கள். நான் மதியம் சாப்பிடாமல், வெறும் டீ மட்டும் குடித்து விட்டு நெஞ்சு வலிக்க வலிக்க கதை சொல்லுவேன். கதை சொல்லி முடித்துவிட்டு வெளியே வந்தால் வாந்தி வாந்தியாக வரும்.
க்ளோனிங்: இப்போதும் நெஞ்சு வலிக்க கதை சொல்லுகிற இயக்குநராகத்தான் இருக்கிறேன். இந்த மேடையில் உள்ள தயாரிப்பாளர்களை போல் 10 ஆயிரம் தயாரிப்பாளர்களை க்ளோனிங் முறையில் உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு கொடுக்க வேண்டும். தமிழ் சினிமா மலர்ச்சியாக மாறவேண்டிய கால கட்டம் வரும் என நினைக்கிறேன். இவையெல்லாவற்றையும் கடந்து, நமது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நாம் படத்தை எப்படி மக்களுக்கு கொடுக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். எந்த கதை தகுதியானதாக மாறுகிறது என்பது முக்கியம்.
போஸ்டர்: நாளிதழிலில் வெள்ளிக்கிழமை ஆனால், 12 படங்களின் போஸ்டர்கள் வருகிறது. அதில் ஒரு படத்தின் போஸ்டர் மட்டும் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற படத்தை எதற்காக மக்கள் பார்க்க வேண்டும்? இந்த நிலை இன்றைக்கு தமிழ் சினிமாவில் உள்ளது. இந்த நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு இரண்டு தயாரிப்பாளர் சங்கங்களுக்கு இடையில் சண்டை, ஃபெப்சி ஊழியர்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்கள், ஓடிடி படத்தை வாங்க மறுக்கிறார்கள், தியேட்டரில் படத்திற்கு ஷோ கிடைக்க மாட்டேன் என்கிறார்கள், அப்படி கொடுத்தாலும் ஷோ கேன்சல் ஆகிறது. இப்படி பல பிரச்னைகள் உள்ளது. இப்படியான சூழலில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டீசரை பார்த்து சந்தோஷமாக உள்ளது எனவும் பேசினார்.


Click it and Unblock the Notifications











