ஆஸ்காருக்குச் செல்லும் லாபதா லேடீஸ்.. தலையில் கொட்டு வைத்த இயக்குநர் வசந்தபாலன்
சென்னை: இயக்குநர் வசந்த பாலன். தமிழ் சினிமாவில் இருக்கக் கூடிய மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இவரது படங்கள் என்றாலே, உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வசந்த பாலன் படத்துக்குப் போனால், நமது பழைய நினைவுகளை தோண்டி எடுத்து நம் கண் முன் ஒரு படமாக கொட்டிவிடுவார் என்ற பேச்சு ரசிகர்களின் மத்தியில் இன்றைக்கும் உள்ளது. தமிழ் சினிமாவில் இவரது படங்களுக்கு என்று எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஒரு படத்தின் வெற்றியை வணிகம்தான் தீர்மானிக்கின்றது என்ற நிலையில் இருக்கும்போதும்கூட, தனது திரைமொழியில் சமரசமில்லாமல் இருக்கும் இயக்குநராக வலம் வருகின்றார். இவ்வாறு கவனிக்கத்தகுந்த இடத்தில் இருக்கும் வசந்தபாலன், இந்த ஆண்டு ஆஸ்காருக்கு இந்தியா சார்பாக தேர்வாகியுள்ள, லாபதா லேடீஸ் படம் குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் திரைத்துறையினருக்கென பல்வேறு விருதுகள் கொடுக்கப்பட்டாலும், ஆஸ்கார் விருது திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுகின்றது. இதுவரை 96 ஆண்டுகள் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. 96வது ஆஸ்கர் விருதுகள் விழா கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி டால்பி திரையரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி இந்த விருதுகள் வழங்கும் விழா நடக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு படங்களுக்கான பட்டியலில் ஒரு விருது வழங்கப்படும். அதற்கான ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் சார்பில் ஒரு படத்தை ஆஸ்காருக்கு அனுப்பும். அப்படியான படங்களில் சிறந்த படத்தினை ஆஸ்கார் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில், இந்தியாவின் சார்பில் இந்த ஆண்டு, எந்த படம் தேர்வாகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. குறிப்பாக, இந்த ஆண்டு பல படங்கள் இந்தியாவைக் கடந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படங்கள் லிஸ்ட்: அந்தவகையில், இந்தியாவின் சார்பில் எந்தப் படத்தை தேர்வு செய்யலாம் என்ற பட்டியலில், தென்னிந்தியாவில் இருந்து பல படங்கள் இடம் பெற்றது. குறிப்பாக, தமிழிலிருந்து தங்கலான், வாழை, கொட்டுக்காளி, மகாராஜா, ஜமா மற்றும் ஜிகர்தண்டா என 6 படங்கள், தெலுங்கில் கல்கி உள்ளிட்ட 3 படங்கள், மலையாளத்தில் உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம் உள்ளிட்ட 4 படங்கள், இந்தியில் லாபடா லேடீஸ், ஆர்ட்டிகள் 370 உள்ளிட்ட 12 படங்கள் மற்றும் தெலுங்கு, ஒடியா, மராத்தி மொழிப்படங்களும் ஆஸ்காருக்கான நாமிநேஷன் லிஸ்ட்டில் இருந்தது.

வசந்த பாலன்: ஆனால், இந்தப் படங்களில் இருந்து லாபதா லேடீஸ் படத்தை இந்தியன் ஃபிலிம் கார்ப்பரேசன், ஆஸ்காருக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வந்தாலும், தென்னிந்திய சினிமாக்களில் பல படங்கள் சிறப்பானவையாக இருந்தும் அவை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் தெரியாமல் அப்செட் மோடில் இருக்கின்றனர். இப்படியான நிலையில், இயக்குநர் வசந்த பாலன் இந்த விஷயம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " லாபதா லேடீஸ் இந்தி திரைபடம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு ஃபீல் குட் டிராமா திரைப்படம். ஆனால் அதைவிட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்" என கருத்து தெரிவித்துள்ளார்.

லாபதா லேடீஸ்: வெயில், அங்காடித்தெரு போன்ற தேசிய விருது வென்ற படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலன் இவ்வாறு தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. லாபதா லேடீஸ் படத்தை, அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ளார். முதலில் திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் பிறகு ஓடிடியிலிம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன்னுடைய முன்னாள் கணவர் அமீர்கானுடன் இணைந்து கிரண் ராவ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











