பிரதீப் ரங்கநாதனின் டிராகன்.. பூமர் கருத்துதான்.. ஆனாலும்.. பாராட்டி தள்ளிய பிரபல இயக்குநர்
சென்னை: லவ் டுடே என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இதுவரை பத்து கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. தொடர்ந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவருவதால் போகப்போக இந்த வசூல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் பிரபல இயக்குநர் வசந்த பாலன் படத்தை பாராட்டியிருக்கிறார்.
ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படைப்பாக வந்திருக்கிறது டிராகன். பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் நேற்று முன்தினம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கலக்கிவரும் அந்தப் படம் இரண்டு நாட்களிலேயே பத்து கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குநர் வசந்த பாலன் டிராகன் படத்தை பாராட்டியிருக்கிறார்.

வசந்த பாலனின் பதிவு: இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "நேற்றிரவு சென்னை விருகம்பாக்கம் தேவிகருமாரி திரையரங்கில் 110ரூ டிக்கெட்டில் டிராகன் திரைப்படத்தைப் பார்த்தேன்.நல்ல காட்சியனுபவத்தை வழங்கிய தேவிகருமாரி திரையரங்கத்திற்கும், 40 ரூ பில்டர் காபி, 70 ரூ nachos, பைக் பார்க்கிங் 20 ரூ வழங்கியமைக்கும் மிக்க நன்றி. இன்றைய சமூகத்தில் குற்றம் செய்வதை ஒரு சாரார் சாகசமாக, அறிவார்ந்தமாக,புத்திசாலித்தனமாக
வாழத்தெரிந்தவனாகப் பார்க்கிற காலமும் மனநிலையும் நிறைந்து வழிகிறது. குற்ற உணர்ச்சியை மொத்தமாக மூளையின் எந்தப் பகுதியிலும் சேமிப்பாகாத படி நூற்றாண்டு மறதிநோயாக மறந்து மாறிவிட்டது.
பூமர் கருத்துதான்: குற்றம் செய்கிற குற்றவாளிக்கு, குற்றத்தால் ஏற்படுகிற குற்ற உணர்ச்சியும், அந்த குற்ற உணர்ச்சியால் குற்றவாளி தனக்குத்தானே தந்துகொள்கிற தண்டனையும் பரிகாரமும் தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை எந்நாளும் நிறுவிக்கொண்டே இருக்கிறது. இந்த பூமர் கருத்தை இன்றைய gen Z இளைஞர்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு கதையை மணிமணியாக கோர்த்து இன்று பார்க்கும் இளைஞர்களின் ஒருவனாக கதாநாயகனை மாற்றி அவனோடு ரசிகர்களை கொண்டாட வைத்து கலங்க வைத்து குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சியை இயக்குனர் அஷ்வந்த் மாரிமுத்து செய்திருக்கிறார். மனமார்ந்த வாழ்த்துகள் அஷ்வத்.

திரைக்கதை சிறப்பு: படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை ஒரு காட்சி கூட இது படத்திற்கு தேவையில்லாதக் காட்சி என்று சொல்லிவிட முடியாதபடி மிகவும் கவனமாக இந்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது இந்த திரைக்கதைக்கான மிகவும் சிறப்பு என்னவென்றால் லட்சம் முறை சொல்லப்பட்ட கல்லூரி கதையில் இத்தனை சுவாரசியங்களையும் இத்தனை தருணங்களையும் உருவாக்கி காட்ட முடியும் என்பது தான். படத்தின் கடைசி நொடி வரை ஆச்சரியங்களை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற திரைக்கதை இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
தோள்களில் சுமந்திருக்கிறார்: பிரதீப் மிக எளிமையாக இந்த கதாபாத்திரத்தை பிரமாதமாக தன் தோள்களில் முதல் காட்சி துவங்கி இறுதிக்காட்சி வரை சுமந்து செல்லும்போது அவனுடன் சிரித்து அழ போதையில் குடிக்க காதலியை முத்தமிட குற்ற உணர்ச்சியில் தவிக்க என்று அழகாக பயணிக்க முடிகிறது. வாழ்த்துகள் பிரதீப்.

மிஷ்கினுக்கும் ஜார்ஜுக்கும் மிகப் பிரமாதமான கதாபாத்திரங்கள் அவர்கள் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் மொத்த திரையரங்கையும் தன் பக்கம் இழுக்கிற ஆளுமையோடு தன் நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். youtube பிரபலங்கள் திரையில் தோன்றும் போது திரையரங்கம் அதிர்ந்து அதிர்ந்து அடங்குகிறது. இன்றைய ரசிகர்கள் திரையைத் தாண்டி யூடியூபிலும் வாழ்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. இயக்குநர் தயாரிப்பாளர் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











