எவ்வளவு நேரம்தான் படிக்க சொல்றது... கொரோனா பற்றி குழந்தைகளுக்குப் போட்டி அறிவித்த பிரபல இயக்குனர்!
சென்னை: கொரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் இயக்குனர் வசந்தபாலன் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி ஒன்றை வைத்துள்ளார்.
Recommended Video
தமிழில், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உட்பட சில படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
இப்போது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

எஸ்.ராமகிருஷ்ணன்
ராதிகா, அபர்ணதி, ரோனித் ராய், சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிகிஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஶ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், பொன். பார்த்திபன் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருடமே முடிந்துவிட்டது.

உருக்கமானப் பதிவு
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு ஏரியாவை கதையில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் கடந்த வருடமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் இயக்குனர் வசந்தபாலன் தனது பேஸ்புக்கில், உருக்கமானப் பதிவு ஒன்றை எழுதி இருந்தார். இது வைரலானது.

வசந்தபாலன்
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சினிமா, கல்வி நிறுவனங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரியவர்களுடன் குழந்தைகளும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இதையடுத்து இயக்குனர் வசந்தபாலன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி ஒன்றை வைத்துள்ளார். சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வரலாற்றுத் தருணம்
இதுபற்றி அவர், 'நண்பர்களே, தனிமைப்படுத்துதல் தேவைதான். ஆனால் அது குழந்தை களுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத் தருணம்.

ஓவியப்போட்டி
அன்று, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடி A4 வெள்ளைப் பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து இந்த மின் அஞ்சல் முகவரிக்கு ([email protected]) அனுப்பி வைக்கலாம். 22 ஆம் தேதி காலை 10 மணி முதல் 23 ஆம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.

கொரோனோவை வெல்வோம்
ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விவரம் இணைக்கப்படுதல் அவசியம்.
பெற்றோர்கள் வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு.
தலைப்பு : கொரோனோவை வெல்வோம் .இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











