பிரபல இயக்குநர் வேலு பிரபாகரனுக்கு கடைசி நிமிடத்தில் என்ன ஆனது?.. இதோ முழு விவரம்
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த வேலு பிரபாகரன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எப்படியும் சிகிச்சையின் உதவியோடு மீண்டு வந்துவிடுவார் என்று நினைத்திருந்த சூழலில் அவர் இன்று காலை உயிரிழந்தர். அவரது உயிரிழப்பு தமிழ் சினிமா உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இவர்கள் வித்தியாசமானவர்கள். அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தனது திரை பயணத்தை தொடங்கிய அவர்; அடுத்ததாக மற்றவை நேரில் என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். இரண்டு படங்களுமே அவருக்கு ஓரளவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநராகும் ஆர்வம் வந்ததால்; மூன்றாவது படத்திலேயே ஒளிப்பதிவோடு சேர்த்து இயக்கவும் செய்தார்.
தொடர்ந்து இயக்கம்: நாளைய மனிதன் என்ற படத்தை இயக்கிய பிறகு சரியான ஜோடி, அதிசய மனிதன், அசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இவற்றில் அசுரன் திரைப்படத்துக்கு ஆர்.கே. செல்வமணி திரைக்கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் இயக்கம் மறுபக்கம் ஒளிப்பதிவு என படு பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த பிரபாகரன்; நடிகராகும் முடிவை எடுத்து அதன்படி நடிக்கவும் செய்தார்.

நடிகராக கலக்கிய பிரபாகரன்: அதன்படி கடவுள், புரட்சிக்காரன், நாளைய பொழுதும் உன்னோடு, காதல் கதை என பல படங்களில் நடித்தார். இவற்றி காதல் கதை படத்தை அவரே இயக்கியிருந்தார். 2009ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரிலீஸ் சமயத்தில் பெரிய பேசுபொருளானது. இதனையடுத்து இயக்கத்திலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் 2017ஆம் ஆண்டு ஒரு இயக்குநரின் காதல் டைரி படத்தை இயக்கிவிட்டு டைரக்ஷனுக்கு முழுக்கு போட்டார்.
திருமண சர்ச்சைகள்: இதற்கிடையே, வேலு பிரபாகரனை பொறுத்தவரை திருமண விஷயத்தில் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தவர். முதலில் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து பிரிந்த அவர்; அடுத்ததாக தன்னுடன் காதல் கதை படத்தில் பணியாற்றிய நடிகை ஷிர்லவே 60ஆவது வயதில் கடந்த 2917ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நல குறைவு: பிறகு முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பிரபாகரன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன், கடாவர், பீட்சா 3, ரெய்டு,வெப்பன் என பல படங்களில் நடித்த அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனையொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தார்கள்.
உயிரிழந்த பிரபாகரன்: இந்நிலையில் எப்படியாவது அவர் உடல்நலம் தேறிவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.அவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முக்கியமாக இறுதி நேரத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிக்காததால்தான் மருத்துவர்களால் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











