கங்கை அமரனுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி.. மதுரை விரைந்த வெங்கட் பிரபு!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மானாமதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் தனது அண்ணன் இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி உள்ளார். எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை இயற்றியுள்ளார். பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் போன்ற பல ஹிட் பாடல்களும் இசையமைத்துள்ளார்.

கங்கை அமரன்: பிரபு நடித்த கோழி கூவுது படத்தை இயக்கி இயக்குநராக மாறிய கங்கை அமரன், ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் இயக்கி தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தார். அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி வசூலை இந்த திரைப்படம் அள்ளியது. இவர் கடைசியாக தெம்மாங்கு பாட்டுக்காரன் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு பிறகு மகன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.
மருத்துவமனையில் அனுமதி: சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த கங்கை அமரன், தற்போது, ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் மானாமதுரையை சுற்றி நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக மானாமதுரை வந்த கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த அவரின் மகன்களான வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பனிக்காலம் என்பதால், மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











