Vettaiyan: விஜய்யே சூப்பர் ஸ்டார் ரசிகர்தான்.. வேட்டையனை என்ஜாய் செய்து பார்த்தார் - வெங்கட் பிரபு
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தினை தளபதி விஜய் பார்த்தார் எனவும் அவர் சூப்பர் ஸ்டார் ரசிகர்தான் எனவும் கூறியுள்ளார்.
வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோவுக்கான கண்டெண்ட்டாக இந்த படத்தின் கதையை இயக்குநர் ஞானவேல் மற்றும் கிருத்திகா ஆகியோர் அமைத்த விதம் பாரட்டுக்குரியது. மேலும் பொருளாதாரா குற்றப்பிரிவு அதிகாரியாக ரஜினி மாற்றப்பட்டபின்னரும்கூட, வில்லனுக்கு எந்த வகையில் தண்டனை பெற்றுத் தரலாம் என கதையை நகர்த்திய விதம் அருமை என பலரும் பாராட்டினர்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தினை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சென்றது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பு: படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. படம் முழுக்க துறுதுறுவான கதாபாத்திரமாக வரும் ஃபகத் ஃபாசில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் கதையோட்டத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதற்கான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அமிதாப் பச்சன் போன்ற கைதேர்ந்த நடிகரின் கண் பார்வையில் இருந்து விரல் அசைவு வரை அனைத்தும் பெர்ஃபெக்ட். ரித்திகா சிங் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகின்றார்.

தளபதி விஜய்: படம் ரிலீஸ் ஆன தினமான கடந்த 10ஆம் தேதி சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தேவி தியேட்டரில் முதல் காட்சி படத்தினையே பார்த்தார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியானது. மேலும் விஜய் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் காட்சிகளும் அவர் காரில் ஏறிச் செல்லும் காட்சிகளும் வெளியானது. இதுமட்டும் இல்லாமல், விஜய் உடன் இயக்குநர் வெங்கட் பிரபுவும் படம் பார்த்தார் எனவும் தகவல்கள் வெளியானது.

வேட்டையன்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, "தளபதியின் கட்சி மாநாட்டிற்கு வாழ்த்துகள். நானும் அவரும் வேட்டையன் படம் பார்த்தோம். இருவரும் என்ஜாய் செய்து படத்தினைப் பார்த்தோம். எல்லோருமே தலைவர் ரசிகர்கள்தானே. விஜய் சார் மீண்டும் படம் நடிக்க வருவாரா எனத் தெரியவில்லை. அது தெரியாமல் நான் எப்படி அவரும் அஜித் சாரும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா எனக் கூறமுடியும் " எனவும் பதில் அளித்தார். விஜய் ரசிகர்கள் வேட்டையன் படத்தினை டிசாஸ்டர் என விமர்சித்த நிலையில், விஜய் வேட்டையன் படம் பார்த்தது அவரது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











