Vetri Maran: விஜய் சேதுபதிதான் எல்லாத்துக்கும் காரணம்.. உடைந்து அழுத வெற்றி மாறன்.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை பாகம் 1. விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது மட்டும் இல்லாமல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றப் படமாகவும் அமைந்தது. குறிப்பாக நகைச்சுவை நடிகர் சூரி, கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்திப்போனார். படத்தில் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் வெற்றி மாறன் உடைந்து அழுதுள்ளார். அது குறித்து காணலாம்.
விடுதலை பாகம் 1, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த நடிகர்கள் படத்தின் தன்மைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முற்றிலும் பொருந்திப் போனதால் ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடினர். மேலும் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியுடன் இப்போதுவரை ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

படம் பார்த்த ரசிகர்கள், சூரியை முதல் முறையாக கதாநாயகனாகப் பார்த்து அசந்து போனார்கள். இவரது நடிப்பினை பெரும்பாலும் பாராட்டினர். குறிப்பாக இந்த படத்திற்காக சூரி கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள், மற்ற எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சூரியின் நடிப்பும் சிரிப்பும் அழுகையும் ரசிகர்கள் தங்களோடு பொருத்திப் பார்த்ததால், படம் செம ஹிட் ஆனது.
விடுதலை 2: விடுதலை படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு நடந்தபோதே, இரண்டாம் பாகத்துக்குமான படப்பிடிப்பினை பெருமளவு வெற்றிமாறன் முடித்துவிட்டார் என்ற தகவல்கள் அப்போதே வெளியானது. இதனால் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இதற்கிடையில் சூரியும் விஜய் சேதுபதியும் மற்ற படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். வெற்றி மாறனும் விடுதலைப் படத்தின் முதல் பாகத்தைக் எடுத்துக் கொண்டு சர்வதேச திரைப்படவிழாக்களுக்கு கொண்டு சென்று, விருதுகளை வென்ற வண்ணம் இருந்தார்.

ஷூட்டிங் ஓவர்: இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில், படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முற்றிலும் முடிந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து, தீவிரமாக பணியாற்றியுள்ளனர். இப்படியான நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் பேசச் சொல்லியுள்ளார் வெற்றி மாறன்.

அழுகை: இதில் விஜய் சேதுபதி பேசும்போது வெற்றி மாறன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குறிப்பாக விஜய் சேதுபதி 40 நிமிடங்கள் இந்தப் படத்தில் பணியாற்றியது தொடர்பாக பேசியுள்ளார். இதனை ஆரம்பத்தில் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்த வெற்றி மாறன், இறுதியில் அழுதேவிட்டார். இந்தப் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக விஜய் சேதுபதி நினைவுபடுத்திப் பேசினார் எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











