இளையராஜாவின் இசை ஒரு மேஜிக்.. இளையராஜா பட விழாவில் வெற்றிமாறன் பேச்சு!
சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன், இளையராஜா, தனுஷ் கலந்து கொண்டார். இதில் பேசிய வெற்றிமாறன், இளையராஜாவின் இசை ஒரு மேஜிக், அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது என்பது மிகபெரிய விஷயம் என்றார்.
கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. தனுஷ் நடிக்க உள்ளார். தனது வாழ்க்கை வரலாற்று படமான இளையராஜா படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

வெற்றி மாறன் பேச்சு: போஸ்டர் வெளியீட்டு விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தான பாரதி, வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வெற்றி மாறன், இளையராஜா சார் இசையை பற்றி நாம் என்ன எல்லாம் சொல்ல நினைத்தோமோ அனைத்தையும் அனைவரும் பேசிவிட்டார்கள். எனக்கு இளையராஜாவின் பாடலை எப்போது கேட்டாலும், அது அம்மாவின் அன்பு போல என்றும் மாறாமல் மனசுக்குள் அப்படியே இருக்கும். அதே போல அவருடன் பழகுவது, எளிமையா, இலகுவா எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நட்பா இருக்கும். இந்த இடத்தில் நட்பு என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், இயக்குநரை அவர் நட்புடன் பார்க்கிறார். இதற்காகத்தான் அந்த வார்த்தையை சொன்னேன்.
மேஜிக் இசை: அவர் என் படத்தை பார்த்து விட்டு எனக்கு ஒன்று தோன்றுகிறது சொல்லட்டுமா என்று கேட்டார். நான் சொல்லுங்க என்று சொன்னதும் தான், அதைப்பற்றி பேசினார். எல்லாம் சொல்லிவிட்டு, இந்த கருத்து இசையமைப்பாளராகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஒரு இயக்குநராக உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என்று சொன்னார். அவருடன் இணைந்து பயணம் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்தற்கு மிக்க நன்றி. இளையராஜாவின் இசை ஒரு மேஜிக், அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது என்பது மிகபெரிய விஷயம், அதைப் பார்க்க அனைவரையும் போல நான் ஆவலாக இருக்கிறேன் என்று வெற்றி மாறன் பேசினார்.
தனுஷ் பேச்சு: முன்னதாக பேசிய தனுஷ், நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லை என்றால், இளையராஜா சார் அவர்களின் பாட்டை அப்படியே கேட்டுக்கொண்டு ஒருவிதமாக மெய்மறந்து தூங்குவோம். ஆனாலும் பல இரவுகள் இளையராஜா சாராகவே நடித்தால் எப்படி இருக்கும் என்று, என் மனதில் நினைத்து நினைத்து தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாற்று படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு. அதில் ஒன்னு நடந்துவிட்டது என கூறினார்.


Click it and Unblock the Notifications











