போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம்.. விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல இயக்குநர்!
சென்னை: போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம் என விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சு வார்த்தைகளை நடத்தியும் எந்த சுமூக தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு
தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்திய நடிகர் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டு பிரச்சனையில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

வெற்றிமாறன் ஆதரவு
ஆனால் இதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநரான வெற்றிமாறன் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள்தான் அதிகாரம் கொடுத்தனர்
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது. அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது.

உரிமைக்காக போராடுகிறார்கள்
விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். உரிமைக்காக போராடுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம்.. இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











