கொடநாட்டில் முதல்வரின் இணைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம் - இயக்குநர் விஜய் பேட்டி

நடிகர் விஜய், மற்றும் தலைவா படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக நீலகிரி மாவட்டம் கொடநாடு சென்றனர்.
முன் அனுமதி பெறாமல் இருவரும் சென்றதால் முதல்வரைச் சந்திக்க இருவரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உடன் எஸ்ஏ சந்திரசேகரனும் அவர்களின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் சென்றனர்.
முதல் செக்போஸ்டிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முதல்வரின் இணைச்செயலரை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அவரிடம் தலைவா படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் கிளம்பி கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் இயக்குநர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தலைவா' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து புகார் மனு அளிக்க சென்றோம். மனுவை கோடநாட்டில் இருந்த முதல்வரின் இணைச்செயலரை சந்தித்து அளித்துவிட்டு திரும்பினோம்.
நாளை (இன்று) தலைவா படம் திட்டமிட்டபடி நிச்சயமாக வெளியிடப்படும் என்று நம்புகிறோம். ஏனெனில் வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களின் பொருளாதார பிரச்சினை இதில் அடங்கி உள்ளது.
இதனால் நானும், நடிகர் விஜயும் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த படத்தை தடையில்லாமல் திரையிடுவதற்கு தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இதற்காக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் மனு கொடுத்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











