பெப்சி -தயாரிப்பாளர் மோதல்: இயக்குநர்களின் சமரச முயற்சி பலிக்குமா?
தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவு பெரிய மோதலாக உருவெடுத்துள்ளது தயாரிப்பாளர்கள் - பெப்சி தொழிலாளர் அமைப்பினருக்கிடையிலான மோதல்.
இந்த மோதலில் யார் பக்கம் நியாயம்? யார் பக்கம் தவறு? என்ற ஆராய்ச்சியைவிட, தமிழ் சினிமாவுக்கு எந்த அளவு இழப்பு என்று பார்ப்பதே முக்கியமானதாக உள்ளது.
இந்த மனநிலையிலேயே முக்கியமான இயக்குநர்கள் பலரும் இருப்பதால், புதிய சங்கம், போட்டி என்பதையெல்லாம் விரும்பாமல், இருதரப்பிலும் இணக்கமாக செயல்படுவதற்கான இன்னொரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்ப்பட உலகின் முன்னணி இயக்குநர்கள் லிங்குசாமி, சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபு சாலமன், கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் நேற்று முன்தினம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நேற்று பெப்சி' நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இருதரப்புமே ஓரளவு விட்டுக் கொடுத்து, ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் முதலில் வேலைகளைத் தொடங்கலாம் என்பதுதான் இயக்குநர்களின் திட்டம்.
ஆனால் ஆளாளுக்கு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்த ஆண்டின் பாதி நாட்களை சண்டையிலேயே கழித்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று வேதனையோடு குறிப்பிட்டார், இந்த முயற்சியில் தீவிரமாக உள்ள ஒரு இயக்குநர்.
அவர் சொல்வதை உண்மையாக்கும் விதத்தில்தான் இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன. பெப்சிக்குள் உள்ள சில யூனியன்கள் இப்போது கலகத்தை ஆரம்பித்துள்ளன. இதனை தங்களுக்குச் சாதகமான விஷயமாகக் கருதிக் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள், அறிக்கைகள் விட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், இயக்குநர்கள் முயற்சியும் வெற்றியைத் தொடுமா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications











