விரைவில் புதிய பாதை 2 படம்.. ரூட்டை மாற்றும் பார்த்திபன்.. யார் ஹீரோ இவரா?
சென்னை : நடிகர் பார்த்திபன், சீதா நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான படம் புதிய பாதை.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற் போல இந்தப் படம் பார்த்திபனுக்கு கோலிவுட்டில் புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் தன்னை பாலியல் வன்முறை செய்தவனையே கணவனாக ஏற்றுக் கொள்வது சரியா என்ற விமர்சனங்களை இந்தப் படம் ஏற்படுத்தியது.

புதிய பாதை படம்
நடிகர் பார்த்திபன்-சீதா நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டில் வெளியான படம் புதிய பாதை. இந்தப் படம் மற்றும் அதன் மேக்கிங் அந்த காலகட்டத்திலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்னை பாலியல் வன்முறை செய்த நாயகனை அந்த படத்தின் நாயகி கணவனாக ஏற்றுக் கொள்வதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது.

தொடர் விமர்சனங்கள்
இதற்கான விளக்கத்தை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். வித்தியாசமான மற்றும் புரட்சிக் கருத்துக்களை கொண்ட படங்களை இயக்கிவரும் பார்த்திபனின் இந்த முதல் படம் தற்போது வரை தொடர் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

அன்பிற்கான ஏக்கம்
இந்தப் படத்தின் நாயகிக்கு சரியான உறவுகள் இல்லாமல் அன்பிற்கு அவர் ஏங்கிய நிலையில், அதேபோல அன்பிற்காக ஏங்கும் பார்த்திபனை அவர் கணவனாக ஏற்றுக் கொள்கிறார் என்று பார்த்திபன் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் தற்போதுவரை தொடர்ந்து அவர் இந்தக் கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார்.

புதிய பாதை 2 படம்
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தான் தயாரிப்பாளர் தாணுவிடம் கூறியதாகவும், அவர் இந்த கேரக்டரில் சிம்பு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தன்னிடம் கூறியதாகவும் பார்த்திபன் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கதையை போல இந்தப் படத்தின் கதை இருக்காது எனவும் முற்றிலும் மாறுபட்ட கதையோட்டத்தில் இந்தப் படத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
புதிய பாதை படம் வெளியாகி தற்போது 33 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் பார்த்திபன் கூறியுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நக்கல் -நையாண்டி
நக்கல் மற்றும் நையாண்டிகளுக்கு சொந்தமானவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இதேபோல நக்கல், நையாண்டி என்றால் தற்போதைய நாயகர்களில் நினைவுக்கு வருபவர் சிம்பு. இதுபோன்ற பல நக்கல்களை அவர் கூறி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபன் கேரக்டரில் சிம்பு சிறப்பாகவே பொருந்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

இரவின் நிழல் படம்
பார்த்திபனின் இயக்கத்தில் தற்போது இரவின் நிழல் படம் உருவாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











