'இரும்புத்திரை' ரிலீஸுக்கு எதிராக சதி.. விநியோகஸ்தர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
சென்னை : விஷாலின் 'இரும்புத்திரை' திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் சதி செய்து தடுப்பதாக தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பி.டி.செல்வகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இவர் விஜய்யின் உதவியாளராக இருந்தவர்.
வரும் வெள்ளிக்கிழமை 'இரும்புத்திரை' வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் விநியோகஸ்தர்களான ஸ்ரீதரன் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் 'இரும்புத்திரை' படத்துக்கு எதிராக சதி செய்பவர்கள் யார் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

"தயாரிப்பாளர் நலன் கருதி விஷால் நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளார். விஷாலின் திரைப்படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். விஷாலின் இரும்புத்திரை படத்தை வெளிவராமல் தடுக்க மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள். உங்களுக்கும் விஷாலுக்கும் பிரச்னை என்றால் எங்களை ஏன் நசுக்குகிறீர்கள்? நிறைய நடிகர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதார். லாரன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளார். யாரோ செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம். நாளை முதல்வரை சந்திக்கச் செல்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.
மேலும் அவர், "ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள். சுமார் 25 ஆண்டுகளாக இந்தக் கட்டபஞ்சாயத்து நடக்கிறது. சென்னை, செங்கல்பட்டு வினியோகிஸ்தர் சங்கத்தலைவர் அருள்பதி இவ்வாறு செய்கிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார் பி.டி.செல்வகுமார்.
"ஒரு போன் காலில் படத்தினை நிறுத்தும் அளவிற்கு திரை உலகம் உள்ளது. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டப்படுகிறோம். அருள்பதி தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. ஒவ்வொரு ஏரியாவிலும் பலர் 5% கமிஷனிற்காக இதை செய்கிறார்கள்." எனக் கூறியுள்ளார்.
"எல்லாரையும் நான் சொல்லவில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள். அருள்பதியும் அவருடன் ஒரு குழுவும் உள்ளது. அனைவரது பெயரையும் கூறினால் என்னை விரட்டி விரட்டி அடிப்பார்கள். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனை உள்ளது. என்னிடம் இருக்கும் ஆதாரத்தினை காவல்துறை கமிஷனரிடமும் கொடுக்கவுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் இதில் என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்ற கேள்விக்கு, "அவர் நடவடிக்கைகள் எடுப்பார். விஷால் ஒரு போராளி எதையும் நேரில் எதிர் கொள்ளக்கூடியவர். விஷாலுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலையை யோசிக்கவேண்டும். அடுத்தகட்டமாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் நான் தாயாராகவும் உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.


Click it and Unblock the Notifications











