ரூ 56 லட்சம் பாக்கி... வாகா படத்துக்கு தடை கோரி விநியோகஸ்தர் வழக்கு!
சென்னை: தனக்கு சேர வேண்டிய ரூ 56 லட்சத்தை வட்டியுடன் வாகா படத் தயாரிப்பாளர் திருப்பித் தராததால், அப்படத்துக்கு தடை விதிக்குமாறு நாகர் கோயிலைச் சேர்ந்த ரூபன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் ரூபன். ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் நெல்லை ஏரியா விநியோகஸ்தர் இவர்.

இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் குமரவேல் இயக்கத்தில் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள வாகா படத்தைத் தயாரித்துள்ள விஜய பார்கவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு எதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், "வாகா படத் தயாரிப்புச் செலவுகளுக்கு விஜய பார்கவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மன்னன் 56 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். 15 மாதங்களாக வட்டியும் தரவில்லையாம். இந்நிலையில் ஆகஸ்ட் 5ல் பணத்தை தருவதாக உத்திரவாதம் கொடுத்தனர். இதுவரை கூறியபடி அசலும் வட்டியும் எனக்கு தரப்படவில்லை. ஆகஸ்ட் 12ல் படம் ரீலீஸ் என பத்திரிகைகளில் விளம்பரம் வந்துள்ளது. படம் ரீலீஸ் ஆகி விட்டால் பணத்தை வாங்குவது சிரமம். எனவே எனக்கு கொடுக்க வேண்டிய அசல் ரூ 50 லட்சம் மற்றும் வட்டியுடன் சேர்த்து 80 லட்சத்தையும் கொடுத்து விட்டு படத்தை திரையிட ஆணையிட வேண்டுகிறேன். இல்லாத பட்சத்தில் எனக்கு பணத்தை தரும் வரை வாகா படத்தை திரையிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்," என்று கோரியுள்ளார்.
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை காலை விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











