விவாகரத்து...தொடர் சர்ச்சை.. அனைத்தையும் மாற்றிய காதல்.. அமலா பால் கடந்து வந்த பாதை!
சென்னை: சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் கையுமாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்.
கேரளாவில் பிறந்த அமலா பால், ஆரம்பத்தில், சந்திரிகா சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு பிறகு தான் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்பிறகு வீரசேகரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு தான் அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மலையாள படத்தை விட மோசமாக இருந்தது. இந்த படத்திற்கு மாமனாரின் இன்ப வெறி என விமர்சனங்கள் வந்தன. இந்த படத்தில் அமல் பால் நடித்ததற்கே ரொம்ப தைரியம் வேண்டும். இதனால், சிந்துசமவெளி படம் வெளியான போது அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

முன்னணி நடிகை: ஆரம்பத்தில் ஒரு மோசமான படத்தில் நடித்திருந்தாலும், இரண்டாவது படம் மைனா அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்ததோடு, அதில் அமலா பாலின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. இதைத்தொடர்ந்து, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து, தன்னை வைத்து இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
கெட்ட பெயர்: விவாகரத்துக்கு பின் அமலாபாலுக்கு சரியாக படவாய்ப்பு அமையாததால், ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆடை படம் வெற்றியடைந்தாலும் அப்படத்துக்கு பின்னர் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதன் பின் நண்பர்களுடன் ஆட்டம் போடுவது, சரக்கு பாட்டிலுடன் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு தனது பெயரை கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து பட வாய்ப்பு வராததால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, கடாவர் என்கிற படத்தை தயாரித்து நடித்தார்.
புகார்: இந்த நேரத்தில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் உடன் நடிகை அமலா பால் டேட்டிங் செய்ததாகவும், இருவரும் நடத்திய திருமண போட்டோஷூட்டில் லிப் லாக் அடித்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அவரைத்தான் அமலா பால் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பவ்நிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகை அமலா பால் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
காதல் திருமணம்: கடாவர் படத்திற்கு பின் மீண்டும் இந்தி, மலையாளம் என ஒரு சில படத்தில் நடித்து வந்த அமலா பால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணமான சில மாதத்திலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக இணையத்தில் செய்திகள் பரவின.
ஆண் குழந்தை: இந்நிலையில் அமலாபாலுக்கு, கடந்த 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீடு திரும்பி உள்ள வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், தன்னுடைய குழந்தைக்கு இலாய்(ILAI) என பெயர் வைத்துள்ளார். அவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த அமலா பால் வாழ்க்கையில், இந்த ஓராண்டில் வண்ணமயமாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











