ஏழைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு.. 'மகிழ்மதி' இயக்கம் தொடங்கினார் நடிகர் சத்யராஜின் மகள்!
சென்னை: நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தான் தொடங்கியுள்ள இயக்கத்துக்கு மகிழ்மதி என்று பெயர் வைத்துள்ளார்.
பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.
தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் இயக்கம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

30 சதவிகித உணவு
அதன்படி இப்போது 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஓர் ஆண்டில் பத்து மில்லியன் திருமணங்கள் நடக்கின்றனர். அதில் பரிமாறப்படும் முப்பது சதவிகித உணவு வீணாகின்றன. உணவும் ஊட்டச்சத்தும் வசதி உள்ளவர்களுக்கு மட்டுதான் என்பது நியாயம் இல்லை.

அரசியல் அமைப்பு இல்லை
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின், அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை. மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்.

தரமான உணவு
கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கொரோனா லாக்டவுன் நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை, இந்த இயக்கம் மேற்கொள்ளும். எனது மகிழ்மதி இயக்கம் என் பல நாள் கனவு. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தேன்.

இணைக்க வேண்டும்
அப்போது, மகிழ்மதி என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி. அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு தகுந்தபடி இந்த பெயர் இருந்ததால் அதையே என் இயக்கத்திற்கு வைத்துவிட்டேன். இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். இந்த அமைப்பு மூலம் பலருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











