Dhurandhar 2: துரந்தர் 2 100% போரடிக்குது.. ஆஸ்கரை மறந்துடுங்க.. நோபல் பரிசு வருது.. விளாசிய நடிகை ரம்யா
பெங்களூரு: நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குநர் ஆதித்ய தார் இயக்கி தயாரித்துள்ள படம் துரந்தர் 2. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. படம் வெளியாகி ஒரு தரப்பில் பாசிடிவான விமர்சனங்களையும் ஒரு தரப்பில் நெகட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான ரம்யா எனப்படுகிற திவ்ய ஸ்பந்தனா, தனது எக்ஸ் பக்கத்தில் துரந்தர் 2 படம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதாவது, இப்போதுதான் துரந்தர் 2 பார்த்தேன், அடடா! ஒரு நல்ல படத்தை எப்படி பொறுமையை சோதிக்கும் வகையில் உருவாக்குவது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
படத்தில் , முடிவில்லாத அர்த்தமில்லாத காட்சிகள் இருப்பதால், ஒரு மிகவும் சலிப்பான பாடப் புத்தகத்தைப் படிப்பது போல இருக்கிறது. படம் பார்க்க பார்க்க ஒரு கட்டத்தில், உங்கள் மூளை சோர்வடைந்து, உங்கள் கண் முன்னே அரங்கேறும் கொடூரத்தைப் பார்த்து, சிரிக்கத் தொடங்கிவிடுவீர்கள். இந்த படத்தை நீங்கள் உண்மையிலேயே இதைப் பார்க்க விரும்பினால், உங்கள் நல்லதுக்கு சொல்கிறேன், திரையரங்கில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்.

இது முழுக்க முழுக்க மொபைல் பார்த்துக் கொண்டே சில படங்களை கடமைக்கு என்று பார்த்து முடிப்போம் அல்லவா அந்த வகையிலான ஒரு படம். இதிலிருந்து தப்பிக்க ஒரு நொடியில் நமக்கு வழிவிடும் ஒரு ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்ப்பதே நல்லது என்று நான் நினைக்கிறேன். இயக்கம், வசனங்கள், படத்தொகுப்பு, பின்னணி இசை, நடிப்பு என அனைத்தும் தரம் குறைந்தவையாகவே இருந்தன. மார்ச் 19 ரிலீஸ் தேதி நெருங்குகிறது என்பதை யாரும் படக்குழுவினரிடம் சொல்லவில்லை என்பது போலவே உண்மையாகவே தோன்றுகிறது.
இல்லையென்றால், இந்த படத்தை இதைவிட மோசமாக கொடுக்க முடியாது என்று தெரிந்துதான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். துரந்தர் (பாகம் 1)-ல், ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரம் செய்தார்கள், கைதட்டினார்கள், உற்சாகமாக இருந்தார்கள். அங்கே ஒரு எனர்ஜி இருந்தது. ஒரு ஈடுபாடு இருந்தது. இதில் - ரசிகர்களிடம் அது எதுவுமே இல்லை. திரையரங்கில் இருந்தவர்களின் ஒட்டுமொத்த ஏமாற்றத்தை உணர முடிந்தது.

ரன்வீர் சிங்: மேலும், ரன்வீர் தான் இந்தப் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்று சொல்பவர்கள், அவர் சரியாக எதைத் தாங்கிப் பிடிக்கிறார் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால், எனக்கு அவருடைய முடி மட்டுமே தெரிந்தது. முதல் பாகத்தில், அவருடைய முடிக்கு ஒரு தனித்துவம், ஒரு ஈர்ப்பு, ஒரு குணாதிசயம் இருந்தது. இதில், அவரது நீண்ட முடி சும்மா இருக்கிறது. எல்லாவற்றிற்கும் இடையூறாக இருக்கிறது.
படமே இல்லை: மேலும் அந்த வன்முறை!!! இது ஒரு படமே அல்ல, இது அடிப்படையில், கையில் இருக்கும் எந்தவொரு பொருளையும் கொண்டு எவ்வளவு படைப்பாற்றலுடன் வன்முறையை வெளிப்படுத்தலாம் என்பதற்கான ஒரு காட்சி வழிகாட்டிப் புத்தகம் இருக்கிறதா? (அப்படி ஒன்று நிச்சயமாக இருக்கவே கூடாது). ஊசி, ஸ்பேனர், கத்திகள், கூர்முனை பந்துகள், அரிவாள்கள், அறுக்கும் கருவிகள், சங்கிலிகள், துப்பாக்கிகள், குண்டுகள், பீரங்கிகள், ஷட்டர்கள் - நீங்கள் எதைச் சொன்னாலும், அதை அவர்கள் ஆயுதமாக்கி உள்ளனர்.

ஒரே போட்டி: இயக்குநர் தனக்குத்தானே ஒரு தொடர்ச்சியான போட்டியில் இருப்பது போல் தெரிகிறது: அதாவது அடுத்த காட்சியை முந்தைய காட்சியை விட எப்படி அதிக வன்முறையாக (நகைச்சுவையாக) மாற்றுவது? என்பதில் சரியான போட்டிதான். ஆக்ஷன் காட்சிகளும் வன்முறைக் காட்சிகளும் அதிர்ச்சியளிப்பதை நிறுத்திவிட்டு, விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு மோசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு கால்களையும் வெட்டி, உடலை மண்ணெண்ணெயில் ஊறவைத்தாலும், அந்த ஆள் ஒரு இறந்த நாய் பேசுவது போல வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறான். இதெல்லாம் எதார்த்தத்தை விட்டு ரொம்பவும் விலகி இருப்பது மட்டுமல்லாமல், கொஞ்சமாவது இதில் அறிவியல் இருக்கிறதா?.
நோபல் பரிசு: ஆஸ்கரை மறந்துவிடுங்கள், நோபல் பரிசு வரப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால்: துரந்தர் 2 ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். அதிகபட்சம் ஒரு தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம். முதல் பாகம் உங்களை ஆர்ப்பரிக்க வைத்திருந்தால், இந்தப் பாகம் 'ஏன் துரந்தர் 2, ஏன்?' என்று உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். ரன்வீர், நீங்கள் இதைவிடச் நன்றாக நடிக்க கூடியவர். ஆதித்யா தார் உங்கள் தேசப்பற்றும் பிரச்சாரமும் பழங்கதையாகி விட்டது. அதிலிருந்து வெளியே வாருங்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பெரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











