சமந்தா விவாகரத்து, தீபிகா படுகோன் காவி பிகினி... தொடரும் சர்ச்சைகள் குறித்து சூடான திவ்யா ஸ்பந்தனா
பெங்களூரு: கன்னட சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா.
நடிகை, தயாரிப்பாளர், அரசியல் என ப்ல களங்களை சந்தித்துள்ள திவ்யா, அதிரடியான கருத்துகளுக்கும் பெயர் போனவர்.
இந்நிலையில், தொடர்ந்து நடிகைகள் குறித்து ட்ரோல் செய்யப்படும் சர்ச்சைகள் குறித்து தனது டிவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார் திவ்யா.

திவ்யா ஸ்பந்தனா ட்வீட்
கன்னடத்தில் அபி திரைப்படம் மூலம் அறிமுகமான திவ்யா, தமிழில் சிம்புவுடன் குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்த திய்வா, ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் பதவி வகித்தார். தற்போது பட தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் திவ்யா, நடிகைகள் மீதான சர்ச்சைகள் குறித்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார். திய்வா ஸ்பந்தனாவின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பெண் வெறுப்புக்கு எதிராக போராட வேண்டும்
திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டரில் சமந்தா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்ததற்காகவும், ராஷ்மிகா மந்தனா தனது கருத்தை வெளிப்படையாக பேசியதற்காகவும், தீபிகா படுகோன் அவரது ஆடைக்காகவும், அவர்களைப் போல பல பெண்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை. பெண்கள் மா துர்காவின் உருவகம் கொண்டவர்கள். பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகள் மீது அத்துமீறல்
சமந்தா, நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்த போது, அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்கள் அவரது தனிப்பட்ட விருப்பம் குறித்து கொச்சையாக கருத்து தெரிவித்து ட்ரோல் செய்திருந்தனர். அதேபோல் சாய் பல்லவியும் குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீதும் அரசியல் தொடர்புள்ள சில அமைப்புகள் ட்ரோல் செய்திருந்தனர். இந்த விமர்சனங்கள் பற்றி சமந்தாவும் சாய் பல்லவியும் அப்போது விளக்கம் கொடுத்திருந்தனர்.

ராஷ்மிகா, தீபிகா சர்ச்சை
இன்னொரு பக்கம் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மீதும் கன்னட திரையுலகில் இருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. காந்தாரா படம் குறித்து அவர் பேசியிருந்தது சரியாக புரிந்துகொள்ளப்படாமல் விமர்சிக்கப்பட்டது. கடந்த இருதினங்களாக தீபிகா படுகோனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பதான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்ல் காவி பிகினி அணிந்திருப்பதாக அவர் மீது பாஜக உட்பட இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டி ட்ரோல் செய்து வருகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களை தான் திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மா-துர்கா போன்று சக்திவாய்ந்தவர்கள். பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாம் போராட வேண்டும். பெண் வெறுப்பு போராட வேண்டிய ஒரு தீமை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











