அன்னக்கிளி டூ சிம்பொனி.. என்றும் தொடரும் ராஜாங்கம்.. இளையராஜாவை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ் நெஞ்சங்களை தனது காந்த இசைப் பேரலையால் பல தசாப்தங்களாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா தனது 83வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், முக ஸ்டாலின் பகிர்ந்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அன்னக்கிளி டூ சிம்பொனி: தமிழர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும் கலந்திருக்கும் மேஸ்ட்ரோ இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர் இளையராஜா. அவருக்கு 'இசைஞானி' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தவர் நம் தலைவர் கலைஞர். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் என்றும் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான் என நெஞ்சம் உருகப் பாராட்டியுள்ளார். நாட்டுப்புற இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை என அத்தனையிலும் கரை கண்ட இளையராஜாவின் இசை, தமிழர்களின் பெருமைமி அடையாளம் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் மீது அன்பு: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளும் (ஜூன் 3), இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவதால், கலைஞர் மீது கொண்ட ஆதித அன்பின் காரணமாக இளையராஜா தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒரு நாள் முன்னதாகவே (ஜூன் 2) மாற்றிக் கொண்டார். இதை திமுக தலைவர் முக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கமல் வாழ்த்து: அதே போல நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு என வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த வாழ்த்துப் பதிவைப் பார்த்த கோடிக்கணக்கான இசை ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications