Rajini: ஜெயிலர் 2விற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக, அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல கலெக்ஷனை அள்ளியது. அந்த படத்தில் இடம் பெற்று இருந்த 'டைகர் கா ஹுக்கும்', காவாலா பாடல் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா என பலர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இதில், ரஜனி 'முத்துவேல் பாண்டியன்' என்கிற 'ஜெயிலர்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேட்டையன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
கூலி: அதன்பின் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார். நாகார்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் படம் ஆகஸ்ட் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புதிய வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா அனைவரும் மாஸாக நடந்து செல்ல,பின்னணியில் அரங்கம் அதிரட்டுமே... விசுலு பறக்கட்டுமே என பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், ரஜினிகாந்த் தளபதி படத்தில் வருவது போல, ஒரு காட்சியும் இடம் பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் 3 மாதம் இருக்கும் நிலையில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் வேலையை படக்குழு தொடங்கி விட்டது.

ரஜினியின் சம்பளம்: கூலி படத்தின் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஜெயிலர் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் பாசில், ஷிவராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினி 260 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி படத்திற்காக அவர் 230 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக சொல்லப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 படத்தில் அவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த படத்திலும் கமிட்டாகாததால், ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும், ரஜினி நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்க இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின. இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்த, லதா ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என கூறினார். இதன் மூலம் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











