சமந்தா, சினிமாவை விட்டே விலக முடிவு செய்தது உங்களுக்கு தெரியுமோ?
சென்னை: படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் முடிவில் இருந்தார் சமந்தா என்பது உங்களுக்கு தெரியுமா?
கவுதம் மேனனின் ஏ மாய சேசாவே படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதில் இருந்து இந்நாள் வரை டோலிவுட்டின் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகிலும் தனக்கென்று ஒரு பெயர் எடுத்துள்ளார்.

அவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் அவரின் மார்க்கெட் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை. சொல்லப் போனால் சமந்தாவை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதாவது திருமணம் செய்தால் மார்க்கெட் போய்விடும் என்று பயப்பட வேண்டாம் என்பதை நடிகைகள் சமந்தாவை பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர்.
சமந்தா, நாகசவுர்யா நடித்துள்ள ஓ பேபி தெலுங்கு படம் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா அளித்த பேட்டி பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.
அந்த பேட்டியின்போது சமந்தா கூறியதாவது,

நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காவிட்டால் சினிமா உலகில் இருந்து விலகிவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒழுங்கான கதாபாத்திரம் இல்லை என்றால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சும்மா பாடல்களில் ஆடிவிட்டு, சில காட்சிகளில் மட்டும் வரும் படங்களில் நான் ஒருபோதும் நடிக்கவே மாட்டேன். கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன். என் முதல் படமான ஏ மாய சேசாவே ஹிட்டானதால் ஆரம்பத்தில் தமிழில் நான் நடித்த படங்கள் ஓடவில்லையே என்று கவலைப்பட நேரம் இல்லை என்றார்.
இந்த ஆண்டு சமந்தாவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆண்டின் துவக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சமந்தா. மேலும் அவர் தன் கணவர் நாகசைதன்யாவுடன் சேர்ந்து நடித்த மஜிலி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவர் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழை போன்றே தெலுங்கிலும் 96 படம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











