நடிகர் விவேக் பெயரில் சாலை...இப்படி தான் வந்தது...முழு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன பிரபலம்
சென்னை : மறைந்த நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள தெருவிற்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இது எப்படி வந்தது, இதற்கு பின்னால் உள்ள கதை என்ன என்பது பற்றி விவேக்கின் நெருங்கிய நண்பரான சினிமா பிரபலம் தனது கடிதத்தில் எழுதி உள்ளார்.
தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் விவேக், கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விவேக்கின் மனைவி சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது கணவர் விவேக்கின் நினைவாக தங்களின் தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நிறைவேறிய விவேக் குடும்ப கோரிக்கை
இந்நிலையில் விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று தகவல் தெரிவித்தார். அவர் தகவல் சொன்ன சில மணி நேரங்களிலேயே விவேக்கின் வீடு அமைந்துள்ள தெருவின் பெயர் சின்ன கலைவாணர் விவேக் சாலை என மாற்றி, சென்னை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட பலகையின் போட்டோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆனது.

பூச்சி முருகன் சொன்ன கதை
இதற்காக பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில், சின்ன கலைவாணர் விவேக் சாலை உருவானதற்கு பின்னால் உள்ள கதையை விளக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும், விவேக்கிற்கும் தனக்கும் இடையேயான நட்பு பற்றியும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பூச்சி முருகன். இதில் அவரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விவேக் உடனான நட்பு
பூச்சி முருகன் தனது கடிதத்தில், இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை கடந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை சந்தித்திராத ஒன்று.
80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டியிருந்த சமயம் அது. விவேக் அவர்கள் அப்போது தான் அறிமுகமானார். நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் எனக்கு மிகச் சிறிய வேடம் தான். ஆனால் விவேக்குடன் வந்த அந்த காட்சி எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
விவேக்குடன் பின்னர் பெரிதாக பேசியது இல்லை. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய சில மாதங்களில் பேசத் தொடங்கினார். கொரோனா கால கட்டத்தில் ரொம்பவே நெருங்கிப் போனோம்.

இப்பவும் நம்ப முடியல
காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அழைப்பு வந்துவிடும். பேசுவோம். அந்த வானத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி அவருடன் பேசலாம். போனை எடுத்ததும் ஒலிக்கும் அந்த, பூச்சி சார் என்ற குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், மறுநாள் காலை அழைப்பதாக சொன்ன விவேக்கிடம் இருந்து அழைப்புக்கு பதிலாக அவரது மரண செய்தி தான் வந்தது. என்னால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. எங்கேயோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருக்கிறார். சென்னை திரும்பியதும் அழைப்பார் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

விவேக்’ஸ் கிரீன் கலாம்
கடந்த 16ந்தேதி விவேக்கின் உதவியாளர் செல் முருகன் அழைத்து 'நாளை சாரின் முதலாண்டு நினைவு நாள். அவரது நினைவாக அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை விவேக்'ஸ் கிரீன் கலாம்' என தொடங்க இருக்கிறோம்' என்று அழைப்பு விடுத்தார். செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையை தீர்த்துக் கொள்கிறேன்.

இப்படி தான் சந்திப்பு நடந்ததா
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம். விவேக்குக்கு நெருக்கமான மிகச் சில நண்பர்களே வந்திருந்தனர். விவேக்கின் நண்பர்களும் அவரது சக நடிகர்களும் அங்கே தான் அந்த கோரிக்கையை வைத்தனர். விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று. பேசிக் கொண்டிருக்கும் போதே தகவல் வந்தது. முதலமைச்சர் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் என்று. அவசரம் அவசரமாக வந்து முதல்வர் எதிரில் நின்றேன். கேட்காமலேயே சொன்னேன் நிகழ்ந்ததை. 'ஒரு வருஷம் ஆகிடுச்சா?' என்றவர் முறையாக ஒரு கடிதம் கொடுக்க சொல்லுங்கள் என்றார். அடுத்த சில நாட்களில் செல் முருகனும், விவேக் குடும்பத்தினரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.

தேங்ஸ் சி எம் சார்
சரியாக 15 வது நாள் இன்று. விவேக் வசித்த தெருவுக்கே அவர் பெயரை சூட்டி அரசாணையே வெளியாகி விட்டது. அந்த அரசாணையில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் கலைஞனை கவுரவிக்க உடனடியாக ஆவண செய்த முதலமைச்சருக்கு நன்றிகள்! விவேக் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கவுரவம் என்று மகிழ்வதா அவர் இல்லையே என்று கலங்குவதா என்று தெரியவில்லை. எங்கிருந்தோ 'தேங்ஸ் சி எம் சார்' என்று சொல்வது மட்டும் கேட்டது. நீங்கள் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள் விவேக் சார்...இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











