Vijayakanth - விஜயகாந்த்திடமிருந்து கேப்டன் பட்டத்தை பறிக்க நடந்த செயல் தெரியுமா?.. எவ்வளவு முயன்றும் முடியலை
சென்னை: விஜயகாந்த்திடமிருந்து கேப்டன் பட்டத்தை பறிக்க நினைத்து நடந்த செயல் குறித்து இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டுவருகிறது. அதேசமயம் எவ்வளவு முயன்றும் அவரிடமிருந்து பட்டத்தை பறிக்க முடியவில்லை. ஏனெனில் அது மக்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்கவோ, மறக்கவோ முடியாத ஒருவர். டாப் ஹீரோவாக வலம் வந்தாலும் அவர் எளிமையாக இருந்தார். மக்களிடம் எளிமையாக பழகினார். இதன் காரணமாகவே அவரை தமிழக மக்கள் தங்களில் ஒருவராக பார்த்தார்கள். இதன் காரணமாகத்தான் அவர் கிராமத்து பக்கம் அசைக்க முடியாத சக்தியாக பல வருடங்கள் திகழ்ந்தார். அரசியலிலும் தைரியமாக களமிறங்கி ஒரு கை பார்த்தார்.

யாருக்கும் கிடைக்காத பெருமை: விஜயகாந்த்துக்கு முதல் படம் வேண்டுமானால் சரியாக போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த படங்களில் தனது திறமையை காண்பித்து ரஜினி, கமல் ஹாசனுக்கு டஃப் கொடுத்தார். முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரபு உள்ளிட்ட ஹீரோக்களுக்கு எல்லாம் கிடைக்காத பெருமை விஜயகாந்த்துக்கு கிடைத்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன பெருமை?: அதாவது ரஜினிகாந்த்துக்கு 100ஆவது படம் ராகவேந்திரா, கமல் ஹாசனுக்கு 100ஆவது படம் ராஜபார்வை, பிரபுவுக்கு 100ஆவது படம் ராஜகுமாரன். இவர்களுக்கு எல்லாம் அந்த படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆகின. ஆனால் விஜயகாந்த்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் கலக்கியது. அந்தப் படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்க ராவுத்தர் தயாரித்திருந்தார்.
தைரியம் வேண்டும்: முக்கியமாக எந்த ஒரு ஹீரோவும் தனது 100ஆவது படத்தில் நீண்ட நேரம் கழித்து இன்ட்ரோ தர யோசிப்பார். ஆனால் விஜயகாந்த்தோ அந்தப் படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல்தான் சீனுக்குள் வருவார். அப்படி நடிப்பதற்கு மிகப்பெரிய தைரியமும்; இயக்குநர் சொன்ன கதையின் மீது நம்பிக்கையும் வேண்டும். அது விஜயகாந்த்துக்கு இருந்தது. அவர் இயக்குநர்களின் ஆர்ட்டிஸ்ட் என்று பிரபுதேவா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். அது உண்மை என்று இதன் மூலமே உறுதி செய்துகொள்ளலாம்.
கேப்டன் பட்டம்: அந்தப் படம் வீரப்பன் கதையை அடிப்படையாக உருவாக்கப்பட்டது. அதில் வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார் விஜயகாந்த். அப்படம் வெளியானதிலிருந்துதான் ரசிகர்களால் விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து விஜயகாந்த் என்றாலே கேப்டன் தான். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும், திரையுலகினரும்கூட விஜயகாந்த்தை கேப்டன் என்றே விளிக்க தொடங்கினர்.
வழக்கு: ஆனால் விஜயகாந்த்துக்கு கொடுத்த கேப்டன் பட்டத்தை பறிக்க வேண்டும். அது ராணுவ வீரர்களுக்கு உரிய பட்டம் என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அந்த வழக்கால் விஜயகாந்த்திடம் கேப்டன் பட்டத்தை பறிக்க முடியவில்லை. ஏனெனில் அது அவராக வைத்துக்கொண்ட பட்டம் இல்லை. மக்கள் கொடுத்த பட்டம்.
அதனால்தான் அவர் கேப்டனாகவே வாழ்ந்தார். கேப்டனாகவே செல்கிறார். விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் நடக்கிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இனி கேப்டன் உறங்கும் இடம் கோயம்பேடில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகம்தான்.. சென்றுவாருங்கள் கேப்டன்..


Click it and Unblock the Notifications











