டேனியல் பாலாஜியை காப்பாத்த 2 மணி நேரம் போராடினோம்.. அவருக்கு இதுதான் பிரச்சனை.. மருத்துவர் விளக்கம்
சென்னை: டேனியல் பாலாஜி செலிபிரிட்டி நல்ல நடிகர் எல்லாம் தாண்டி 48 வயசுல ஒருத்தர் உயிருக்குப் போராடும் போது அவரை எப்படியாவது காப்பாத்தணும் என்பது மட்டும் தான் எங்களுடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், 2 மணி நேரம் போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என டேனியல் பாலாஜிக்கு கடைசி நேரத்தில் சிபிஆர் செய்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
சித்தி சீரியலில் டேனியல் எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான பாலாஜி டேனியல் பாலாஜி என்றே சினிமாவில் அழைக்கப்பட்டு வந்தார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் தம்பி உறவு முறை கொண்ட டேனியல் பாலாஜியும் முரளியை போல 40 பிளஸ் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டேனியல் பாலாஜி மரணம்: புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த டேனியல் பாலாஜி ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோயில் கட்டி அந்த கோயிலையும் பார்த்துக் கொண்டு வந்தார். கடைசியாக கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் பெரிதாக படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். 48 வயதான டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. கெளதம் மேனன், வெற்றிமாறன், அமீர், விஜய்சேதுபதி, அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்தனர்.
2 மணி நேர போராட்டம்: மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கடைசி நேரத்தில் தான் டேனியல் பாலாஜியை கொண்டு வந்தனர். அவரை அழைத்து வந்த நண்பர்கள் இருவருமே டாக்டர்கள் தான். முதலுதவி செய்வது ஆஸ்பிரின் கொடுப்பது என அனைத்தையும் செய்து விட்டனர். பொதுவாகவே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் சிபிஆர் சிகிச்சை ஒரு மணி நேரம் தான் செய்வோம். ஒரு மணி நேரத்துக்குள் பிழைக்கவில்லை என்றாலே காப்பாற்ற முடியாது. டேனியல் பாலாஜியை காப்பாற்ற வேண்டும் என போராடி 2 மணி நேரம் சிகிச்சை செய்து பார்த்தோம். எதுவுமே பலனளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முரளிக்கு நேர்ந்தது போல: ஏற்கனவே அண்ணன் முரளி 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதே போல இவருக்கு ஆகியிருக்குமா? என்கிற கேள்விக்கு இந்தியாவில் அதிகம் மாரடைப்பால் இறக்கின்றனர். குடும்ப வியாதியாகவும் இது மாறி வருகிறது. அதிக கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு உள்ளிட்டவை இருந்தால் மருத்துவரை அணுகி உடலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சைலன்ட் கில்லர் நாம தான் நல்லா இருக்கோமே என நினைத்துக் கொண்டு நெஞ்செரிச்சல் வரும் போதெல்லாம் சின்ன சின்ன கை வைத்தியங்களை பார்த்துக் கொண்டு கவனிக்காமல் விட்டால் காப்பாற்றுவது கஷ்டம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











