உங்கள் மகனை பற்றி அப்படி பேசினேனா?.. மன்னித்துவிடுங்கள் நெப்போலியன்.. மனம் திறந்த மருத்துவர்
சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம்தான் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருக்கிறது. அவருக்கு இந்தத் திருமணம் தேவையில்லாத ஒன்று என்று ஒருதரப்பினர் கூற; இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று மறுதப்பினர் கேட்க என தினமும் தனுஷின் திருமணம் பற்றிய பேச்சு வந்துவிடுகிறது. இந்தச் சூழலில் நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகன் பற்றி மருத்துவர் ஒருவர் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. அவர் அக்ஷயா என்ற பெண்ணை மணந்திருக்கிறார். தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அவருக்கு இந்தத் திருமணம் தேவையில்லாத ஒன்று; ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் குடும்பம் சீரழித்துவிட்டது என்று பலரும் பேசினார்கள். ஆனால் அக்ஷயாவோ முழு சம்மதத்துடனேயே தனுஷை தான் திருமணம் செய்துகொண்டதாக பதிலடி கொடுத்தார்.

தனுஷும் பதிலடி: இதற்கிடையே திருமணம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த தனுஷ், 'எனது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து நிறைய பேர் இன்ஸ்டாவில் போட்டிருந்தீர்கள். அனைவருக்கும் நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய பேர் பாசிட்டிவ்வாக பேசியிருந்தீர்கள். சில பேர் எனது திருமணம் பற்றி நெகட்டிவ்வாக பேசியிருந்தார்கள்.
நிரூபித்து காட்டுகிறேன்: நெகட்டிவ் பேச்சுக்கள் என்னை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருக்கிறது. அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூஃப் செய்து வென்று காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். அதை ப்ரூஃப் பண்ணிட்டு உங்களிடம் வந்து பேசுகிறேன். என்னைப் போல் இருக்கும் நிறைய பேர் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் கேட்கவே கூடாது. விட்டுக்கொடுக்காமல் முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நெப்போலியன் பேட்டி: சூழல் இப்படி இருக்க நல்லபடியாக திருமணம் முடிந்தது. அதனையடுத்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நெப்போலியன், "என் உயிர்த்தோழன் பாபு என்ற ஒரு நடிகர் இருந்தார். அவர் ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு 30 வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்தார். அவருக்கும் எனக்கும் நேரடியாக பழக்கம் கிடையாது. இருந்தாலும் பொன்வண்ணன் எனக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லி உதவி செய்ய சொன்னார்.
வருத்தமாக இருக்கிறது: பாபு என்பவர் என்னைப் பொறுத்தவரை எனது குருநாதர் பாரதிராஜாவின் மாணவர். அந்த ஒரு எண்ணத்திலேயே மாதா மாதம் அவருக்கு பணம் அனுப்பினேன். ஆனால் சில யூட்யூப் சேனல்களில் எனது மகன் குறித்து ஒரு மருத்துவர் பேசினார். அந்த மருத்துவருக்கு பாபு நெருங்கிய உறவினர். ஆனால் அவரை அந்த மருத்துவர் சரியாக கவனித்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனது மகனை பற்றி பேசினார். அதனை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது" என்றார்.
மருத்துவர் காந்தராஜ்: நெப்போலியன் குறிப்பிட்ட மருத்துவர் காந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சினிமா பிரபலங்கள் பற்றி சில பேட்டிகள் அளித்த சமீபத்தில்கூட வழக்கில் சிக்கினார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு இதுகுறித்து பேசிய மருத்துவர் காந்தராஜ், "நெப்போலியன் மகன் பற்றி எந்த இடத்திலும் நான் பேசவில்லை. அவர் என்று குறிப்பிடாமேலேயே என்னிடம் அவருக்கு வந்த தசை சிதைவு நோய் குறித்து கேட்டார்கள். நான் அந்த நோய் பற்றித்தான் பேசினேன்.
மன்னித்துவிடுங்கள் நெப்போலியன்: ஒருகட்டத்தில் நெப்போலியன் மகனுக்கு அந்த நோய் என்றதும் நான் அதைப் பற்றி பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஒரு மருத்துவராக நோயாளியை பற்றி பேசக்கூடாது. அதேசமயம் அக்ஷயா தனது வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்தேன். நான் பொதுவாக பேசியது கஷ்டத்தை கொடுத்திருந்தால் நான் நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் எனது அக்கா மகன் பாபுவுக்கு நெப்போலியன் பண உதவி செய்தது தெரியாது. முதல் ஆளாக விஜய்தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். பிறகு பொன்வண்ணன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் உதவினார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications