நெசமாவாய்யா..? விஜய் சேதுபதியை இயக்கப் போறாராம்ல ராமராஜன்? அப்படியொரு சீன் கண்டிப்பா இருக்குமே!
சென்னை: முன்னாள் ஹீரோ ராமராஜன், விஜய் சேதுபதி இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டானது.
அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர். ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமராஜன், மண்ணுக்கேத்த பொண்ணு படம் மூலம் டைரக்டர் ஆனார்.

நம்ம ஊரு நல்ல ஊரு
அது ஹிட்டானதை அடுத்து, மருதாணி, மறக்கமாட்டேன் உட்பட மேலும் சில படங்களை இயக்கினார். நம்ம ஊரு நல்ல ஊரு படம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் வரவேற்பு பெற்றதை அடுத்து, தொடர்ந்து ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். முன்னணி நடிகராக இருந்த போது, அப்போதைய டாப் ஹீரோயினாக இருந்த, நடிகை நளினியை காதலித்தார் ராமராஜன்.

விவாகரத்து
இந்த காதலுக்கு நளினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் இருவரும் 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அருண், அருணா என்ற மகனும், மகளும் உள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்றனர். அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்த ராமராஜன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

மீண்டும் இயக்குகிறார்
இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ராமராஜன், கடைசியாக மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்நிலையில், கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால், அது உருவாகவில்லை. இப்போது ராமராஜன் மீண்டும் படம் இயக்கப் போவதாகவும் விஜய்சேதிபதி நடிக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.

டைரக்ஷன் மட்டும்
முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியிடம், ராமராஜன் கதை சொல்லி இருப்பதாகவும் அதில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்றும் டைரக்ஷன் மட்டுமே செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. பால் கறப்பதுபோலவும் அப்போது பாடல் பாடுவது போலவும் ஒரு சீன் கண்டிப்பாக இருக்கும் தானே என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











