நாய்க்குட்டி படம் ஜூலியும் நாலு பேரும்: 'பேய் டூ நாய்' கோலிவுட்டின் புதிய ட்ரெண்ட் ஆரம்பம்
சென்னை: தமிழ் சினிமாவில் பேய் சீஸன் முடிந்து நாய் சீஸன் தொடங்கியிருக்கிறதோ? என்று எண்ணக்கூடிய அளவுக்கு நாய்களை மையமாகக் கொண்ட படங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2014 ம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளியான 'நாய்கள் ஜாக்கிரதை' நன்கு ஓடி கல்லா கட்டியது. மேலும் சிபிராஜுக்கு பிரேக் கொடுத்த படமாகவும் 'நாய்கள் ஜாக்கிரதை' அமைந்தது.
'நாய்கள் ஜாக்கிரதை' வெற்றி பெற்றாலும் பேய்களின் மீதுள்ள மோகத்தால் நாய்களின் பக்கம் தமிழ் சினிமாவின் கவனம் திரும்பவில்லை.

தற்போது முன்போல ரசிகர்கள் பேய்களுக்கு பயப்படுவது இல்லை, இதனால் கோலிவுட்டில் பேய்களின் ஆட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நாய்களின் பக்கம் படைப்பாளிகளின் கவனம் திரும்பியுள்ளது. ஏற்கனவே 'நாய்க்குட்டி படம்' என்ற பெயரில் ஒருபடம் உருவாகி வருகிறது.
அடுத்ததாக சர்வதேச அளவில் நடைபெறும் நாய்க்கடத்தலை மையமாகக் கொண்டு 'ஜூலியும் நாலு பேரும்' என்ற படம் உருவாகியுள்ளது. இளம் இயக்குனர் சதீஷ்.ஆர்.வி. இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து சதீஷ் "இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலை பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்.

பிரபல தொலைக்காட்சி புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
லக்கி என்ற நாய் இப்படத்தின் ஹீரோவாக நடித்திருக்கிறது' என்று கூறியிருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கோலிவுட்டில் அடுத்ததாக நாய் சீஸன் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications