திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!- காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்வதற்கு பெருநகரக் காவல் துறை சார்பில் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திரையரங்குகளில் திரைப்படம் காண வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூலித்தால் தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறைச் சட்டப்படி குற்றமாகும்.

இதைத் தடுக்கும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக வரும் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனிப் படையில் காவல் துறை உதவி ஆணையர்கள், வணிகவரித் துறை அதிகாரிகள், கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். மேலும், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனே பொதுமக்கள், சென்னை பெருநகரக் காவல் துறையை 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











