பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை.. வதந்திகளை பரப்பவேண்டாம்.. குடும்பத்தினர் வேண்டுகோள்!
சென்னை: பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவர் உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என பாடல்களுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

ஐதராபாத்தில்
கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு, பத்ம பூஷன் விருதை அறிவித்தது. ஆனால், இது தாமதமாக தனக்கு அறிவிக்கப்படும் விருது என்று அதை வாங்காமல் நிராகரித்து விட்டார் ஜானகி. கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், ஐதராபாத்தில் தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் வசித்து வருகிறார்.

மீண்டும் வதந்தி
சில வருடங்களுக்கு முன்னதாக, ஜானகி வீட்டில் தவறி விழுந்துவிட்டார். அதனால் உடல் நலம் குன்றி இருந்தார். அப்போது உடல்நலம் பற்றி வதந்தி வந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் முதலே ஜானகி குறித்து மீண்டும் வதந்தி உருவானது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை
இந்நிலையில் அவரது மகன் முரளி கிருஷ்ணா, விளக்கம் அளித்தார். அதில், 'அம்மாவுக்கு சின்ன அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறார். தேவையில்லாமல் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனாவும் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

தவறான தகவல்
அதில், 'எஸ்.ஜானகி அம்மா உடல் நிலை பற்றி தவறான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது தான் எஸ்.பி.பி அண்ணாவிடம் பேசினேன். அவர் ஜானகி அம்மாவின் குடும்பத்தினரிடம் பேசினார். ஜானகி அம்மா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். தன்னை ஆறுமுறை வதந்திகளால் கொன்றுவிட்டதாக எஸ்.பி.பியிடம் அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் தவறான தகவலையும் பரப்பாதீர்கள்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











