ஸ்டாலின் சாரை கிண்டல் செய்யாதீங்க.. கஷ்டமா இருக்கு.. விஜய் குடும்பத்திலிருந்து வந்த குரல்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றிருக்கும் விஜய் 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருக்கிறார். இன்னும் மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கண்டிப்பாக கிடைத்துவிடும் என்றே கருதப்படுகிறது. ஆளுநரும் விஜய்யை இன்று நேரில் அழைத்திருக்கிறார். எனவே இன்றோ அல்லது நாளையோ தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார். இந்நிலையில் விஜய்யின் மாமா மகள்கள் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது. விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். 10 சீட்டைக்கூட பிடிக்கமாட்டீர்கள் என்றுதானே சொன்னீர்கள்; இப்போது பாருங்கள் 108 சீட்டுக்களை வென்றிருக்கிறோம் என்று மார்தட்டவும் செய்கிறார்கள். என்னதான் அவர் 108 தொகுதிகளில் வென்றாலும் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. அதன் காரணமாக மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்க தொடங்கினார் விஜய்.

மற்ற கட்சிகளின் ஆதரவு: அதற்காக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதமும் எழுதினார். ஆளுநரையும் நேரில் சந்தித்தார். விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு பிறகு திமுக கூட்டணியில் அங்கம் வகித்து ஐந்து எம்.எல்.ஏக்களை பெற்ற காங்கிரஸ்; தற்போது கூட்டணியிலிருந்து வெளியே வந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டது. இதனால் விஜய்யின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு பலம் 113ஆக உயர்ந்தது. இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு எப்போது கிடைக்கும் என்ற திக் திக் நிமிடங்களில் தவெகவினர் இருக்கிறார்கள்.
ஆளுநருக்கு குவியும் கண்டனம்: அதேசமயம் வாக்கு சதவீதத்தில் மெஜாரிட்டி வைத்திருக்கும் விஜய்யை இன்னமும் ஏன் ஆட்சியமைக்க கூப்பிடவில்லை என ஆளுநருக்கும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. சற்று நேரத்துக்கு முன்புதான் விஜய்யை மீண்டும் நேரில் அழைத்திருக்கிறார் ஆளுநர். கூடிய விரைவில் தவெகவுக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்கும்; இன்றோ அல்லது நாளையோ தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் விஜய்யின் மாமா சுந்தரின் மகள்கள் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் பேட்டி: அவர்கள் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் வந்த அன்று நாங்கள் ஷோபா அத்தை, எஸ்.ஏ.சி மாமாவுடன்தான் இருந்தோம். என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற மைண்ட் செட்டில்தான் அவர்கள் இருந்தார்கள். விஜய் அண்ணா முன்னிலை வகித்து வெற்றி பெற்றவுடன் எல்லோருக்குமே அவ்வளவு மகிழ்ச்சி. அவர் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று தெய்வத்திடமும், எங்கள் அப்பாவிடமும் தினமும் வேண்டிக்கொண்டேதான் இருந்தோம். ஏனெனில் விஜய்க்கு எங்கள் அப்பாவை ரொம்ப பிடிக்கும்.
அப்படி செய்யாதீங்க: எஸ்.ஏ.சி மாமாவிடம் விஜய் அண்ணா வாழ்த்து பெற்றது, 'ஜெயித்துவிட்டோம் அப்பா' என்று கூறினார். அதற்கு மாமா, 'என் கனவை எல்லாம் நிறைவேற்றிவிட்டாய் ப்பா' என கூறினார். எங்களிடமும் அண்ணா ஜாலியாக பேசினார். விஜய் அண்ணா வெற்றி பெற்றாலும் ஸ்டாலினை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள், ட்ரோல்களை பார்க்கிறோம். அது உண்மையில் எங்களுக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவருக்கு அரசியலில் 70 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் இருக்கிறது. அப்படிப்பட்டவரை கிண்டல் செய்யக்கூடாது. அவரை கிண்டல் செய்வதில் விஜய் அண்ணாவுக்கும் உட்னபாடு இல்லை" என்றார்கள்.


Click it and Unblock the Notifications
