விஜய் மகன்னு சொல்லாதீங்க.. அவருக்கு வேற பெயர் இருக்கு.. கடுப்பான நடிகர்.. என்னங்க நடக்குது?
சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். ஷூட்டிங் ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. தந்தை போல் மகனும் சினிமாவில் தனக்கான தனியிடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்நிலையில் அவர் குறித்து சந்தீப் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் வசூல் மன்னனாக திகழ்பவர் விஜய். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனிமேல் நடிகர் விஜய்யிலிருந்து அரசியல்வாதி விஜய்யாக மட்டுமே அவரை பார்க்க முடியும்.

விஜய்யின் மகன்: விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்னும் மகன் இருக்கிறார். அவர் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்திருக்கிறார். தந்தை போல் அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குநர் பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் அவர். அவர் படிக்கும்போதே ஒரு குறும்படத்தையும் இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சினிமாவை விட்டு போகும் சூழலில் அவரது மகன் திரைத்துறைக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல் படம்: இயக்குநராகும் கனவோடு இருந்தவருக்கு லைகா நிறுவனம் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. சங்கீதாவின் தந்தையும், சங்கீதாவும் பேசித்தான் லைகா நிறுவனத்திடம் வாய்ப்பை பெற்றதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி படத்தின் அறிவிப்பு கடந்த வருடமே வெளியாகிவிட்டாலும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. கவின், ஜீவா உள்ளிட்டோரிடம் ஜேசன் கதை சொன்னதாகவும் அவர்கள் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்றும் ஒரு பேச்சு ஓடியது.
சந்தீப் ஹீரோ: இப்படிப்பட்ட சூழலில் படம் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் வட்டமடித்தன. ஆனால் அவை அனைத்தும் பொய் என்று உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஜேசனின் உழைப்பை தமன், ராமையா உள்ளிட்டோர் எல்லாம் பயங்கரமாக பாராட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
கடுப்பான சந்தீப்: இந்நிலையில் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், 'விஜய்யின் மகன் படம்' என்று கேள்வியை ஆரம்பித்தார். அதற்கு உடனடியாக பதிலளித்த சந்தீப், 'விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். அவருக்கு ஜேசன் சஞ்சய் என ஒரு பெயர் இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடித்த சூப்பர் படமாக வரும்' என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் மகன் என்று சொன்னால் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்ப; மறுதரப்பு ரசிகர்களோ, 'அப்படி ஏன் ஜேசனை ஒரு வட்டத்துக்குள் சுருக்க வேண்டும். தந்தை துணை இல்லாமல் வென்றால்தான் அவருக்கு மதிப்பு' என்று பதிலளித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











