கரும்புள்ளி விமர்சனத்தால் பாடகர் உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்

நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது:
உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்ததால் கலந்து கொண்டேன்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் தமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரினார். மேலும் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். உன்னி கிருஷ்ணனின் இந்த கருத்துதான் தற்போது டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











