டிராகன் காட்டும் கெத்து.. மூன்றாவது நாள் வசூல் இத்தனை கோடியா?.. நூறு கோடி ரூபாய் கன்ஃபார்ம்தானோ
சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டிராகன் திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது. அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு வந்த அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் படம் பார்க்க கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் வெளியாகி மூன்றாவது நாளான நேற்று டிராகன் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதில் ரித்திகா சிங், அசோக் செல்வன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தின் வெற்றியால் அஷ்வத் மாரிமுத்துவுக்கு தெலுங்கில் அந்தப் படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அதனை முடித்த அவர் தற்போது டிராகன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

படம் ரிலீஸ்: மொத்தம் 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் அப்படத்தில் பிரதீப்புடன் அனுபமா, கயாடு லோஹர், மிஷ்கின், ஜார்ஜ் மரியன், கௌதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. டான் 2தான் இந்தப் படம் என்று விமர்சனங்கள் எழுந்த சூழலில் கடந்த 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியானது. லவ் டுடே கொடுத்த வெற்றியை இந்தப் படத்தில் பிரதீப்பும், ஓ மை கடவுளே கொடுத்த வெற்றியை அஷ்வத்தும் தக்க வைப்பார்களா என்று பலரும் நினைத்தார்கள்.
மெகா ஹிட்: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பெரிய ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு போட்டியாக வந்த தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இருக்கும் இடம் தெரியாமல் அடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே டிராகன் படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. இதன் காரணமாக தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தது.
ஹவுஸ்ஃபுல்தான்: முக்கியமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கின்றன. அதிலும் மாயாஜால் தியேட்டரில் பெரும்பாலான ஷோக்களில் டிராகன் படத்தையே திரையிடுகிறார்கள். அதேபோல் வேறு பல தியேட்டர்களிலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை யோசிக்காமல் தூக்கிவிட்டு இந்தப் படத்தை திரையிட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த வருடத்தில் பெரிய பிளாக் பஸ்டர் என்ற பெயரை டிராகன் திரைப்படம் பெற்றிருக்கிறது.
வசூலிலும் கெத்துதான்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் ஆறு கோடி ரூபாயை தமிழ்நாட்டில் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 10.8 கோடி ரூபாயை வசூலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூலே கிடைத்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் படத்துக்கான கூட்டம் மேலும் அதிகரித்திருக்கிறது.
அதன்படி நேற்றைய தினம் தமிழ்நாட்டில் மட்டும் டிராகன் திரைப்படம் 11 கோடி ரூபாய்வரை தமிழ்நாட்டில் வசூலித்திருக்கிறதாம். ஆக தமிழில் மட்டும் அந்தப் படம் 27 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. தெலுங்கில் இதுவரை மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளையும் சேர்த்து டிராகன் திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் படத்துக்கு தொடர்ந்து தியேட்டர்கள் அதிகரித்துவருவதால் இப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











