மீண்டும் இணைவோம்.. டிராகன் இயக்குநர் கொடுத்த மாஸ் அப்டேட்.. கண் கலங்கிய பிரதீப் ரங்கநாதன்!
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் படத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்,சினேகா,கௌதம் மேனன், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று தியேட்டரில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு சூப்பர் என பலரும் அவரை புகழ்ந்து வரும் நிலையில், படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து, தனது அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
டிராகன் படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில், அஸ்வந் மாரிமுத்து, பிரதீப் இருவரும் ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் ரங்கநாதன், இப்படி ஒரு அழகான படத்தை எனக்கு கொடுத்த அஸ்வத்துக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். டிராகன் படத்தை ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் பொழுதும், உணர்ச்சிவசப்பட்டு அழுது விடுவேன். நண்பனாக அவனுடன் நான் 10 ஆண்டு காலம் இருந்து இருக்கிறேன், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது எனக்கு தெரியும், ஆனால் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த பிறகு தான் அஸ்வத் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பது எனக்கு தெரிந்தது.

கண்கலங்கிய பிரதீப்: டிராகன் திரைப்படம் ஒரு நல்ல படம், கருத்துள்ள படம் இந்த திரைப்படத்தை எனக்கு கொடுத்த என்னுடைய நண்பர் அஸ்வத்துக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என கண் கலங்கியபடி அஸ்வத்தை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதீப், எனக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்து, உங்களில் ஒருத்தனாக, என்னை இந்த இடத்தில் நிற்க வைத்த அனைவருக்கும் நன்றி, இரண்டு கைகளையும் கூப்பி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மீண்டும் இணைவோம்: இதையடுத்து பேசிய, அஸ்வத் மாரிமுத்து, இதுவரை யாருக்கும் சொல்லாத ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லுகிறேன் ஏஜிஎஸ், அஸ்வத், பிரதீப் ரங்கநாதன் காம்போ மீண்டும் வரும். அடுத்த முறை நண்பருக்காக இல்லை, பிரதீப் ரங்கநாதன் என்கிற ஒரு ஸ்டாருக்கான படமாக அது இருக்கும். அடுத்த மூன்று வருடத்தில் நாங்கள் மீண்டும் இணைவோம் என்றார். பின் நண்பன் பிரதீப்பை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











