Mohan G: என்ன சாதிக்க போறீங்க.. இதுதான் காதலா? கொந்தளித்த மோகன் ஜி!
சென்னை: நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இயக்குநர் மோகன் சாதி மறுப்பு திருமணம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு ஜூன் 13ந் தேதி கட்சி அலுவலகத்தில்,கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர்.

அடிதடி: இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதுவே உண்மையான காதல்: இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி, இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இது எந்த மாதிரியான வலி என்று.. பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்ன தான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே.. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள்.. அதுவே உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











