சிம்புவுடன் படம் பண்ணுவீங்களா.. கேள்வி கேட்ட ரசிகர்.. திரெளபதி இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: சிம்புவுடன் இணைந்து படம் பண்ணுவீங்களா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் திரெளபதி படத்தின் இயக்குநர் ஜி. மோகன்.
ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில், பிப்ரவரி 28ம் தேதி வெளியான படம் திரெளபதி.
சாதிய படம் என்றும், நாடக காதலை அம்பலப்படுத்திய காவியம் என்றும், கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு எழுந்தன.

மறுத்த ரஞ்சித்
திரெளபதி படம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் ஏதும் கூற மறுத்து இயக்குநர் பா. ரஞ்சித் சென்றது சர்ச்சையை கிளப்பியது. படம் வெளியான பின்னரும், திரெளபதி படத்தை ரஞ்சித் பார்க்க வேண்டும் என மோகன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், ரஞ்சித்துக்கு மகன் பிறந்த நிலையிலும், வாழ்த்து கூறியிருந்தார்.

மாட்டிக் கொண்ட நவீன்
குப்பை படம் பத்தியெல்லாம் எதுக்குப் பேசணும் என ட்வீட் போட்ட மூடர் கூடம் இயக்குநர் நவீனுக்கும், திரெளபதி பட ஆதரவாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. உங்க தப்பை உணருங்க, கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதீங்க நவீன் என திரெளபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மோகன் ட்வீட் போட்டு நவீனை பங்கமாக கலாய்த்திருந்தார்.

பயங்கர எதிர்ப்பு
பரியேறும் பெருமாள், அசுரன் படங்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போது, பாராட்டிய தமிழ் சினிமா, ஏன் நாடக காதல் குறித்தும் ரெஜிஸ்டிரேஷன் ஆபிஸ் ஊழல் குறித்தும் படமெடுத்ததுக்கு இப்படியொரு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்ற கேள்விகளும், இதெல்லாம் ஒரு படமா? என்ற எதிர்ப்புகளும் இந்த படத்திற்கு எழுந்தது.

வாங்கவில்லை
18 நாட்கள் தியேட்டரில் சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஓடிய திரெளபதி படம் பல கோடிகளை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை எந்தவொரு டிவி சேனலும் வாங்க முன் வரவில்லை என திரெளபதி படத்தின் இயக்குநர் ஜி. மோகன் வருத்தத்துடன் ட்வீட் போட்டிருந்தார்.

அமேசான் பிரைம்
இறுதியாக, அமேசான் பிரைமில் திரெளபதி படத்தை வியாபாரம் செய்த இயக்குநர் மோகன், கொரோனா குறித்த விழிப்புணர்வுகளையும், தன்னால் இயன்ற உதவிகளையும், செய்து வருவதாக அவ்வப்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறார். பொதுமக்கள் மத்தியிலும், தனித்திருத்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சிம்புவுடன்
இந்நிலையில், ரசிகர் ஒருவர், போல்டாக படம் நடிக்கக் கூடியவர் சிம்பு, போல்டான கதையை இயக்கக் கூடியவர் நீங்கள், நீங்கள் இருவரும் இணைந்து படமெடுத்தால், அருமையாக இருக்கும் என பதிவிட, அவரது பதிவை பார்த்த இயக்குநர் மோகன், சிம்பு நடிக்க தயார் என்றால், நான் இயக்க ரெடி, ரிச்சர்டு ரிஷியுடன் அடுத்த படத்தை முடித்தவுடன் அதற்கான வேலைகளை செய்ய முயல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஓகே சொல்வாரா சிம்பு
"பெரியார் குத்து" பாடலுக்கு நடனமாடிய நடிகர் சிம்பு, திரெளபதி பட இயக்குநர் ஜி. மோகன் இயக்கத்தில் நடிக்க சம்மதிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சபரி மலைக்கு எல்லாம் போயிட்டு வந்து ஆளே மாறிட்டாருய்யா சிம்பு, ஓகே சொன்னாலும் சொல்வார் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். கொரோனா போற வரைக்கும் எவனும் எதையும் பண்ண முடியாது என்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











