சுல்தானுக்கு எதிராக போராட்டம் : படைப்பு சுதந்திரத்தில் கை வைப்பதா - எஸ்.ஆர். பிரபு கண்டனம்
Recommended Video
சென்னை: கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்டு உருவாகவில்லை என்று படக்குழு விளக்கமளித்துள்ளது. வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது அடுத்த தயாரிப்பான சுல்தான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சுல்தான் திரைப்படம், திப்பு சுல்தான் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் என்றும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு மலைக்கோட்டையில் எடுக்கப்படக் கூடாதென்றும் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஒரு சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது அவர்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களால் இரு வேறு அமைப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு கலவரத்தை உண்டாக்கியது. போலீசார் நடித்திய பேச்சுவார்த்தைக்கு பிறகே கூட்டம் களைந்து அமைதி நிலவியது.
இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்று தெரிவித்துள்ளார் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர். பிரபு. மேலும், சுல்தான் திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், இப்படம் எந்த ஒரு வரலாற்று பின்னணியோ அல்லது திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை அடைப்படையாகவோ கொண்டு எடுக்கப்படும் படமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீப காலமாக தனி நபராகவோ அல்லது ஒரு சில அமைப்புகள் கூட்டணியாகவோ சேர்ந்து தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சில திரைப்படங்களை தாக்கி வருகிறார்கள். ஒரு திரைப்படத்தில் என்னென்ன காட்சிகள் இடம் பெறலாம், என்னென்ன காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதை எல்லாம் முடிவு செய்வதற்காக தணிக்கைக் குழு என ஒன்று உள்ளது.
அதற்கும் மேலாக தங்களுடைய திரைப்படத்தில் என்ன காட்சிகள் காண்பிக்கப்பட்ட வேண்டும் என்பது அந்தந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கு உள்ள உரிமை. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் ஆகும். இதை எந்த ஒரு அமைப்போ அல்லது தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் தேசிய தலைவர்களையும், வரலாற்று தலைவர்களையும் சாதி மத வேறுபாடு காட்டி அவர்களது வரலாற்றையும் வாழ்வையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும், எங்களது கண்டனத்தை இந்த அறிவிப்பு மூலம் பதிவு செய்து கொள்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளார் எஸ்.ஆர். பிரபு.
சுல்தான் திரைப்படம் எந்த வகையிலும் திப்பு சுல்தானின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.


Click it and Unblock the Notifications











