Vijay: விஜய் பெயரைக் கெடுக்காதீர்கள்.. ரசிகர்களின் வன்மத்துக்கு பளார் விட்ட கைதி தயாரிப்பாளர்!
சென்னை: சூர்யாவின் கங்குவா படம் மாபெரும் வசூலைக் குவித்து, அதன்மூலம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தினையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் படம் விமர்சகர்கள் தொடங்கி சூர்யாவின் ரசிகர்கள் வரை பெரும் வரவேற்பினைப் பெறவில்லை. படக்குழுவினரின் உழைப்பு அனைவராலும் பெருமளவு பாராட்டப்பட்டாலும், படத்தின் திரைக்கதை மற்றும் இசை பெரும் பின்னடைவாக அமைந்தது. இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் கங்குவா படம் குறித்து இணையத்தில் தொடர்ந்து சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் பின்னடவைச் சந்தித்தது. இதற்கு காரணம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் கூறும் கருத்தினை பல யூடியூப் தளங்கள் ஒளிபரப்பியது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள் பலரது கவனத்தினை ஈர்த்தது.

குறிப்பாக, " விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடகங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

யூடியூபர்கள்: அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்க தக்கது. சமீபத்தில், "கங்குவா" திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர். ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய கருத்துக்களை பதிவு செய்து மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channel-களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிட்டிருந்தனர்.

பதிலடி: இதனைக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக உள்ள எஸ்.ஆர். பிரபு சூர்யாவின் குடும்ப உறுப்பினர். அதனால்தான் இதுபோன்ற அறிக்கை வெளிவந்துள்ளது எனக் குறிப்பிட்டு பதிவிட்டதுமட்டும் இல்லாமல், எஸ்.ஆர். பிரபுவையும் டேக் செய்திருந்தார். இந்தப் பதிவினைப் பார்த்த, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, " என்னடா தம்பி ஒரு அடி திருப்பி அடிச்சதுக்கே 5 வருசமா கதறிகிட்டு இருக்கீங்க. மக்கள் பணி நிறைய இருக்கு, போய் அண்ணணுக்கு துணையா அடுத்த வேலைய பாருங்கடா! நல்ல மனுசன், அவரு பேர கெடுத்துட்டு திரியாதீங்க!!" என பதிவிட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் எனக் குறிப்பிட்டுள்ளது என்பது, கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படத்துடன் கைதி படம் ரிலீஸ் ஆனது. அதில் பெரும் பாராட்டினைப் பெற்ற படமாக கைதி மாறியது.



Click it and Unblock the Notifications











