வாயோடு வாய் வைத்து குரங்குக்கு உயிர் கொடுத்த இளைஞர்…நெகிழ்ந்து பாராட்டிய சூர்யா !
சென்னை : குரங்குக்கு செயற்கை சுவாசம் கொடுத்து உயிரைக்காத்த ஓட்டுநரை நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டி உள்ளார்.
பெரம்பலூரில் நாய் கடித்ததால் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிய குரங்கை, வாலிபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய வைரலானது.

காயமடைந்த குரங்கு
பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. அதில் படுகாயமடைந்த குரங்கு, மரத்தில் ஏறி தப்பித்து, கிளை ஒன்றில் படுத்தவாறு மூர்ச்சையானது. இதைப்பார்த்த கார் டிரைவர் பிரபு, மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறக்கினார். குரங்கை பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

மூச்சுகொடுத்து
ஆனால், பாதி வழியிலேயே குரங்கின் தலை துவண்டு விழுந்தது. குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த பிரபு, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார். ஆனாலும், எவ்வித அசைவும் இல்லாமல் குரங்கு இருந்தது. இதனால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார். இதை தொடர்ந்து, மூச்சு விட துவங்கிய குரங்கு கண் விழித்து பார்த்தது.
குவியும் பாராட்டு
இனி காப்பாற்றி விடலாம் என தீர்மானித்த பிரபு, பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள், குரங்குக்கு சிகிச்சை அளித்து குரங்கை காப்பாற்றினார்கள். பின்னர் வனத் துறையினரிடம் குரங்கு ஒப்படைக்கப்பட்டது. பிரபுவின் செயலை உடன் சென்ற நண்பர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி பிரபுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பாராட்டிய சூர்யா
ஓட்டுநர் பிரபுவின் இந்த செயலை பாராட்டும் வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு அவரை பாராட்டி உள்ளார். பலரும் பிரபுவின் அந்த செயலை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











