விஜய்யை திட்டிய வாகன ஓட்டி.. பதிலடி கொடுத்த விஜய் ரசிகை.. சாலையில் நடந்த தரமான சம்பவம்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களமிறங்குவதால் இந்த முறை தேர்தல் நான்கு முனைப் போட்டியாக மாறி உள்ளது. ஆட்சியை முதல் தேர்தலிலேயே கைப்பற்றுவோம் என்ற முனைப்பில் விஜய் களமிறங்கி இருந்தாலும் ஆட்சியில் உள்ள திமுக எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஏற்கனவே களத்தில் முனைப்பில் உள்ள நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி தமிழ்நாடு பொதுத் தேர்தலை மிகவும் சூடாக்கி உள்ளது.
இந்நிலையில் விஜய் இன்று திருச்சியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது விஜயின் வாகனத்தை பார்த்த ஒரு வாகன ஓட்டி அவரை பார்த்து 'இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்க போறாறோ' என்று ஒருமையில் விமர்சித்தார். இவரது விமர்சனத்தை கேட்ட விஜயின் ஆதரவாளர்களில் ஒரு பெண் உடனே அந்த ஆணுக்கு பதிலீடு கொடுக்கும் விதமாக அவரை காட்டமாக விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த பெண் தேவை இல்லாமல் பேசாதீங்க என்று சொல்லிவிட்டு காட்டமாக சில வார்த்தைகளையும் பயன்படுத்தினார். அதுவும் சாலையில் வாகனத்தில் அந்த ஆணை துரத்திப் பிடித்து விமர்சித்தார்.

தவெக அரசியல் நடவடிக்கைகள்: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த ஆண்டு முதல் தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இதில் கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட மிகப்பெரிய நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு சம்பவமாக மாறியது. இது தொடர்பான விசாரணை சிபிஐயில் நடைபெற்று வருகிறது. அதேபோல் அதன் பின்னர் சேலத்தில் பிரச்சார கூட்டம் நடத்திய போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார், தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்ய வந்தபோது விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞர், சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறையின் வாகனத்தில் மோதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உயிரிழந்தார்.
விமர்சனம்: இதற்கெல்லாம் முன்னதாக அவரது முதல் மாநாடு மற்றும் இரண்டாவது மாநாடு என இதுவரையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நடிகர் விஜய் மீதும் அவரது அரசியல் கட்சி மீதும் வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இந்த உயிர் இழப்புகள் முன்வைக்கப்படுகின்றன. காரணம் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த ஒருவரின் வீட்டிற்கு கூட நடிகர் விஜய் நேரடியாக சென்று துக்கம் விசாரிக்காதது பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ஆதரவு: விஜயின் ஆதரவாளர்கள் விஜய் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்றால் அவருக்கு பாதுகாப்பு முறையாக வழங்கப்படாது என்றெல்லாம் கூறி விஜய்க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள். ஆனாலும் அரசியல் என்று வந்த பிறகு தன்னை தொடர்ந்து மக்களால் எளிய முறையில் அணுக முடியாத ஒரு நபராக விஜய் தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் இது தமிழ்நாடு அரசியலுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும் பலர் விமர்சிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











