போதை வழக்கு: நடிகர்கள், நடிகைகளை தப்ப வைத்துவிட்டனர்-ஆர்டிஐ ஆர்வலர் குமுறல்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகை அதிர வைத்த போதைப் பொருள் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் எந்த பிரபலத்தின் பெயரும் இல்லை.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்தியதுடன், விற்பனையும் செய்ததாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சிலரிடம் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து பலமணிநேரம் விசாரணை எல்லாம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் குற்றப்பத்திரிகைகளில் எந்த பிரபலத்தின் பெயரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
பத்மநாப ரெட்டி என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் விண்ணப்பித்து இந்த தகவலை பெற்றுள்ளார். புரி ஜெகன்நாத், சார்மி, முமைத் கான், ரவி தேஜா, சின்னா, நந்து, தருண், நவ்தீப், சுப்பா ராஜ் என்று யார் பெயருமே குற்றப்பத்திரிகையில் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் பத்மநாப ரெட்டி.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
போதைப் பொருள் வழக்கு விசாரணை நடந்தபோது தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார்கள். அதன் பிறகே விசாரணை மந்தம் அடைந்தது. இந்த விசாரணை மீது சந்தேகம் உள்ளது. பிரபலங்களை தப்ப வைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டனர். பெயருக்காக அப்பாவிகளின் பெயர்களை குற்றப் பத்திரிகைகளில் சேர்த்துள்ளனர் என்கிறார்.


Click it and Unblock the Notifications











