இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்
சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது.

அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது.
கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











