கதையைக் கேட்டதும் புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்த எல்ரெட் குமார்!
தமிழ் சினிமாவில் துடிப்போடு இயங்கும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எல்ரெட் குமார்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள் என அடுத்தடுத்து படங்கள் தந்தவர் எல்.ரெட் குமார்.

தற்போது ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா-துளசி நடிக்கும் 'யான்' படத்தை தயாரித்து வருகிறார்.
திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதிலும் முனைப்பு காட்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை டி.கே. என்ற இளைஞருக்குத் தந்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் முதல் படத்திலிருந்து பணியாற்றியவர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் எல்.ரெட்குமார் கூறும்போது, 'கோ' படத்தில் பணிபுரியும்போதே எனக்கு டி.கே.வைத் தெரியும். அவரது உழைப்பையும், தொழில் பக்தியையும் கண்டு வியந்து இருக்கிறேன். கதையை கேட்டவுடனேயே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்துவிட்டேன். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தலைப்பு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்,' என்றார்.


Click it and Unblock the Notifications











