பெற்ற மகனை பறிகொடுத்த சோகம்..மூன்றே வாரத்தில் உயிரிழந்த என் உயிர்த் தோழன் பாபுவின் அம்மா!
சென்னை: என் உயிர்த் தோழன் பாபுவின் தாய் பிரேமாவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இன்று காலை உயிரிழந்தார்.
1990ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் என் உயிர் தோழன். இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபுவை ஹீரோவாக பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.

அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்களில்: என் உயிர் தோழன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாபுவுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்து, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக அறியப்பட்ட பாபு. தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். 4 படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு தனது ஐந்தாவது படத்தில் தனது திரை வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்.
படுத்த படுக்கையானார்: மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தின் சண்டை காட்சியின் போது, தவறான இடத்தில் குதித்ததால், அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, கடந்த 20 வருடங்களாக படுத்த படுக்கையாகவே இருந்தார். பல ஆண்டுகளாக எழுந்து நடக்கக்கூட முடியாமல் இருந்த பாபுவின் உடல்நிலையில், கடந்த மாதம் மோசமானதை அடுத்து, உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சோகத்தில் உயிர் பிரிந்தது: இந்நிலையில், பெற்ற மகனை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்த என் உயிர் தோழன் பாபுவின் தாய் பிரேமாவின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். மகன் இறந்த மூன்றே வாரத்தில் தாயும் உயிரிழந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாபுவின் தாய் பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி ஆவார்.


Click it and Unblock the Notifications











