பெண் குழந்தைகளை விற்கும் பீகார் சந்தையைப் படமாக்கும் ஆச்சார்யா ரவி!
பீகாரில் 21 ரூபாய்க்கெல்லாம் பெண் குழந்தைகளை விற்கும் கொடுமையைப் படமாக எடுக்கிறார் ஆச்சார்யா ரவி.
கௌதம் விஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்க ஆச்சார்யா ரவி எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு 'என்னதான் பேசுவதோ' என தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய்ராம், விக்னேஷ், ரோசன், சின்னச்சாமி தாஸ் ஆகியோருடன் தக்ஷா என்ற ஹைதராபாத் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஏஎஸ் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, டி இமான் இசையமைக்கிறார்.

பீகாருக்கே போய்...
இந்தப் படத்துக்காக, பீகாருக்கே போய் சில காலம் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றைப் பார்த்து திரைக்கதை அமைத்துள்ளாராம் ரவி. காட்சிகளையும் அங்கேயே படமாக்கினாராம்.

ஆச்சார்யா ரவி
அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "வித்தியாசமான கதைக் களத்துக்காகக் காத்திருந்த போது, பீகாரில் பெண் குழந்தைகள் விற்கப்படுகிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக விற்கப்படுகிறது, யாரால் வாங்கப்படுகிறது, விற்கப்பட்ட அந்த பெண் குழந்தை பின்னாளில் என்ன ஆகிறது? தற்போதைய அந்த பெண்ணின் நிலைமையை அவள் பெற்றோர்கள் அறிவார்களா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுந்தது. பீகாருக்கு போனேன்.

பெண் குழந்தை சந்தை
குழந்தைகளை விற்று வாங்குவதற்கென்றே பீகாரில் ஒரு கிராமம், கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுச் சந்தை போல் ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கூடுகிறது. தங்களது பெண் குழந்தைகளை பைக்கிலும், ஆட்டோவிலும், சைக்கிளிலும் வந்து விற்று விட்டு போவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து நடப்பவைகளை கண்காணித்தேன். இடையே நக்சலைட்டுகள் தொந்தரவு வேறு.

பெயரை மாற்றி
பெயரை மாற்றி உருவத்தை மாற்றிக் கொண்டு அவர்களோடு அவர்களாக சுற்றித் திரிந்து நான் கண்டதையும், கேட்டதையும் வைத்து கதைக் களத்தை உருவாக்கினேன். இதை திரைப்படமாகக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

குழந்தை வாங்கலியோ...
நான் பார்த்த காட்சிகள் திரைப்படத்தில் வர வேண்டுமென்றால் பீகார் சென்று அந்த கிராமத்திலேயே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தேன். வெற்றிகரமாக பதிவும் செய்து விட்டேன். பீகாரில் உள்ள மக்களையே நடிக்கவும் செய்து விட்டேன்.
சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
குழந்தை வாங்கலியோ குழந்தை என்ற சோகக் குரல்கள் பீகார் முழுக்க ஒலிக்கிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது," என்றார் ஆச்சார்யா ரவி.


Click it and Unblock the Notifications











