சன் பிக்சர்ஸ் நாளை அறிவிக்கப்போகும் எதற்கும் துணிந்தவன் அப்டேட் இதுதானா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: இதுவரை அண்ணாத்த படத்தின் புரமோஷனை நடத்தி வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட புரமோஷனை ஆரம்பித்துள்ளது.
ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் என திரையுலகமே சூர்யா பற்றி சூடு பறக்க பேசிக் கொண்டிருக்கும் போது சரியான நேரத்தில் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டை நாளை களமிறக்க காத்திருக்கிறது சன் பிக்சர்ஸ்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்பீம் அனல்
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னிய சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாக அந்த படத்திற்கும் அதை தயாரித்து நடித்த சூர்யாவுக்கும் எதிராக பாமகவினர் போர்க்கொடி தூக்க நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மற்ற கட்சி தலைவர்களும், நடிகர்களும் களமிறங்கி உள்ளனர்.

பலப்படுத்தும் சூர்யா
எச்சரிக்கை விடுப்பவர்களுக்கு பணிந்து சென்று மன்னிப்பு கேட்காமல், தன் மீது எந்த தவறும் இல்லை என்கிற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. மேலும், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி கூறி தனது பக்கத்தை பலப்படுத்தி வருகிறார்.

எதற்கும் துணிந்தவன் அப்டேட்
ஜெய்பீம் சர்ச்சை ஒரு பக்கம் அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்க நாளை மதியம் 12 மணிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஹாட் அப்டேட்டை வெளியிடப் போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அண்ணாத்த படத்தின் வசூல் டிராப் ஆன நிலையில், எதற்கும் துணிந்தவன் அப்டேட்டை கையில் எடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

அந்த அப்டேட்டா
சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை சர்வதேச அளவில் பெற்று வரும் நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை ஒடிடியில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிடப் போகிறோம் என்கிற அறிவிப்பை தான் நாளை சன் பிக்சர்ஸ் அதிரடியாக வெளியிடப் போகிறதா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வலிமையுடன் மோதல்
மேலும், வரும் பொங்கலுக்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகும் என்றும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்துடன் எதற்கும் துணிந்தவன் படம் பெரிய கிளாஷ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களுக்கு சிம்ம சொப்பனமாக அட்லீஸ்ட் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மார்க்கெட்டிலாவது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் அப்டேட் எப்போ
அண்ணாத்த படத்தின் அப்டேட்கள் முடிந்த நிலையில், தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட புரமோஷனை சன் பிக்சர்ஸ் ஆரம்பித்துள்ள நிலையில், இப்போதைக்கு எங்களுக்கு அப்டேட் கிடைக்காது என விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். எதற்கும் துணிந்தவன் முடிந்த பிறகு தனுஷ் பட புரமோஷனை முடித்து விட்டுத் தான் சன் பிக்சர்ஸ் பீஸ்ட் பட புரமோஷனை மார்ச் மாதம் தொடங்குமா? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











